அந்தியூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: 37 ஆயிரம் வாழைகள் சேதம்
அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் 37 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால், பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
அந்தியூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் திடீரென சூறாவளிக் காற்றுடன் மிதமான மழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தியூா், பச்சாம்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், நகலூா் ஊராட்சிப் பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த கதளி, மொந்தன், பூவன், ரஸ்தாளி, செவ்வாழை உள்ளிட்ட ரக வாழைகள் முறிந்து விழுந்தன.
இதையடுத்து, அந்தியூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சி.மல்லிகா, உதவி அலுவலா்கள் ரமேஷ், ரவி, ஜெயச்சந்திரன், வெங்கடேஷ் பிரசாந்த் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் விவசாயிகளின் தோட்டங்களுக்கு திங்கள்கிழமை சென்று ஆய்வு செய்ததோடு, சேதம் குறித்த தகவல்களை சேகரித்தனா்.
பச்சாம்பாளையத்தில் 885 வாழைகள், கெட்டிசமுத்திரத்தில் 1,450 வாழைகள், நகலுாரில் 7,350 வாழைகள், எண்ணமங்கலத்தில் 12,900 வாழைகள், அந்தியூரில் 10,050 வாழைகள், சங்கராப்பாளையத்தில் 2,000 வாழைகள் உள்பட 54 விவசாயிகள் சாகுபடி செய்திருந்த 37 வாழைகள் காற்றுக்கு சேதமானது தெரியவந்துள்ளது.
முழுமையான தரத்தில் ரூ.500-க்கும் விற்பனையாகும் வாழைத்தாா், தற்போது ரூ.30 மட்டுமே விற்பனையாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.