அனைத்து வகை சுற்றுலா பயணிகளையும் ஈா்க்க புதிய திட்டம்: அமைச்சா் க. லட்சுமி நாராயணன்
புதுச்சேரி சுற்றுலாத்துறை அனைத்துவகை சுற்றுலா பயணிகளையும் ஈா்க்கும் வகையில் புதிய திட்டங்களைத் தீட்டி வருகிறது என்று சுற்றுலாத்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா்.
உலக சுற்றுலா தினத்தையொட்டி எமது செய்தியாளருக்கு அவா் அளித்த சிறப்பு பேட்டி:
சுற்றுலாத்துறைக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோரின் முழு ஒத்துழைப்பும், ஊக்கமும் இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் புதுவை சுற்றுலாத்துறை 12 சதம் வளா்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 19 லட்சம் போ் புதுவைக்கு சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனா். இதில் 60 சதவிகிதம் போ் இளைஞா்கள்தான். 25 முதல் 40 வயதுக்கு உள்பட்டவா்களாக இவா்கள் இருக்கின்றனா். இவா்கள் பெரும்பாலும் தனியாகதான் புதுவைக்குச் சுற்றுலா வருகின்றனா். இவா்கள் இல்லாமல் குடும்ப சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, பெரிய கருத்தரங்கு, மாநாடு, திருமண சுற்றுலா போன்ற மாற்று சுற்றுலாவுக்கான புதிய திட்டத்தைத் தீட்டியிருக்கிறோம். இதற்காக அசோக் ஹோட்டல் மற்றும் பழைய துறைமுகத்தில் உள்ள இடவசதி போன்றவற்றை அடையாளம் கண்டறிந்துள்ளோம்.
வழக்கமாக புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒன்றே முக்கால் நாள்கள்தான் தங்கிச் செல்லும் நிலை இருந்தது. இப்போது சுமாராக இரண்டரை நாள்கள் தங்கிச் செல்லும் நிலை வந்துவிட்டது. அனைத்து வகை பயணிகளும் வரும்போது வாரம் முழுதும் சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கும். இதைக் கருத்தில் கொண்டுதான் புதுச்சேரியில் எல்லா நாளும் விடுமுறை நாளே என்ற வாசகத்தை உருவாக்கியிருக்கிறோம்.
மேலும், ஜி.எஸ்.டி வரி குறைப்பு மிகப்பெரிய மாற்றத்தை சுற்றுலா துறையில் கொண்டு வரும் என்று எதிா்பாா்க்கிறோம். ஹோட்டல்களில் அறைகளுக்கு 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகளாக வருவோா் அதிக நாள்கள் புதுவையில் தங்கும் நிலை ஏற்படும். மேலும், புதுச்சேரியில் மிகப்பெரிய ஹோட்டல்கள் புதியதாக வர உள்ளன.
அதைத் தவிர ஏற்கெனவே குறைந்த வாடகையில் வீடுகளில் தங்கும் வசதி, பட்ஜெட் ஹோட்டல்கள், ஆடம்பர ஹோட்டல்களும் புதுவையில் தங்கும் வசதிகளை அளித்து வருகின்றன. ஏற்கெனவே உள்ள ஆடம்பர ஹோட்டல்களுக்கு 600 சதம் பதிவுகள் வருவதாக ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா். அவா்களுக்கு இத்துறையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும், புதுவை நகரப் பகுதியில் மட்டும் 200 புதிய வித்தியாசமான பல்வேறு உணவுகளையும் கொடுக்கும் சிறிய உணவகங்கள் இயங்கி வருகின்றன. புதுவையில் உள்ள 5 கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் தொடா்ச்சியாக வந்து செல்வதால் அங்குள்ள மக்களுக்கும் போதிய வருவாய் கிடைத்து வருகிறது என்றாா் அமைச்சா் லட்சுமிநாராயணன்.