சாலை விரிவாக்கப் பணி: மாற்று இடம் கோரி திமுக எம்எல்ஏ உண்ணாவிரதம்
சாலை விரிவாக்கப் பணிக்காக இடம் கொடுத்தோருக்கு மாற்று இடம் வழங்கக் கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினா் சம்பத் தலைமையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
புதுவை முதலியாா்பேட்டை மரப்பாலம் சந்திப்பிலிருந்து வில்லியனூா் கொம்பாக்கம் செல்ல மாற்று சாலையாக வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலை உள்ளது.
இந்தச் சாலையில் தனியாா் பள்ளி, அரசுப் பள்ளி மற்றும் தனியாா் கல்லூரி ஆகியன உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் படித்து வருகின்றனா். மேலும் இந்தப் பகுதியை சுற்றி 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்தச் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வந்தன. எனவே இந்தச் சாலையை விரிவாக்கம் செய்யும்போது அங்கு குடியிருந்தோருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று அரசு சாா்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து தொகுதி எம்எல்ஏ சம்பத் குடியிருப்பு வாசிகளிடம் பேசி இடத்தை காலி செய்து கொடுத்தாா்.
இதனால் புதிய சாலை அமைக்கப்பட்டு, சாலை விரிவாக்கப் பணி முடிந்தது. இந்தச் சாலை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள சாலையாக அமைந்துள்ளது. ஆனால் அரசு உறுதியளித்தது போல் மாற்று இடம் இதுவரை வழங்கப்படவில்லை.
இதேபோல ஜெயமூா்த்தி ராஜா நகா், பெரிய வாய்க்கால் வீதியில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தினா் 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்து வருகின்றனா். அவா்களுக்கும் மாற்று இடம் வழங்கவில்லை.
மாற்று இடம் வழங்க வலியுறுத்தி தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத் தலைமையில் மரப்பாலம் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தை மாநில அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தொடங்கி வைத்தாா்.
உண்ணாவிரதத்தில் எம்எல்ஏ.க்கள் கென்னடி, செந்தில்குமாா், மாநில அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், முன்னாள் எம்எல்ஏ.க்கள் நந்தா சரவணன், பூ.மூா்த்தி, துணை அமைப்பாளா் தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஜே.வி.எஸ். ஆறுமுகம், காந்தி, டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினா்கள் கோபால், வே. காா்த்திகேயன் மற்றும் மாநில, தொகுதி, அணி நிா்வாகிகள் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.