அமெரிக்க விமான நிலையத்தில் கைவிலங்கிட்டு.. நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர்!
அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் தரையில் படுக்கவைத்து, ஒரு குற்றவாளியைப்போல கைவிலங்கிடப்பட்டு, கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டவரைச் சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார். டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை 1,080 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஹிந்தி மொழியில் புத்தகங்களை எழுதியவரும், சமீபத்தில் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த இந்திய-அமெரிக்க சமூக தொழில்முனைவோரான குணால் ஜெயின் என்பவர் சமூக வலைத்தளத்தில் ஒரு விடியோ பதிவைப் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட அந்தப் பதிவில்,
அமெரிக்காவின் நியூஜெர்சியின் நேவார்க் விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்குச் செல்வதற்காகக் காத்திருந்தபோது நடந்த இந்த சம்பவம் மனதை உலுக்கியது.
I witnessed a young Indian student being deported from Newark Airport last night— handcuffed, crying, treated like a criminal. He came chasing dreams, not causing harm. As an NRI, I felt helpless and heartbroken. This is a human tragedy. @IndianEmbassyUS#immigrationraidspic.twitter.com/0cINhd0xU1
— Kunal Jain (@SONOFINDIA) June 8, 2025
இந்தியாவைச் சேர்ந்த இளம் மாணவர் ஒருவரை போலீஸார் தரையில் மண்டியிட வைத்திருந்தனர். அவருடைய கைகளில் விலங்கு போடப்பட்டிருந்தது. கதறி அழுத அந்த மாணவனை ஒரு குற்றவாளி போன்று நடத்தினர். அவர் கதறும் காட்சி மனதை மிகவும் பாதித்தது. மாணவனின் உச்சரிப்பிலிருந்து அவர் இந்தியாவின் வடக்கு ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் பைத்தியம் அல்ல.. என்று அந்த மாணவன் புலம்பிய காட்சி மனதைப் பிழிவதாக இருந்தது. வெளிநாடு வாழ் இந்தியராக என்னால் எந்த உதவியையும் அந்த மாணவருக்குச் செய்ய முடியாமல் திகைத்து நின்றேன்.
ஆனால், இந்தியாவில் உள்ள மாணவர்களை பெற்றவர்களோ தனது மகனோ/மகளோ வெளிநாடுகளில் படிக்கின்றனர் என்பதைத் தவிர அங்கு அரங்கேறும் எந்த கொடுமைகளைப் பற்றியும் யோசித்திருக்கமாட்டார்கள். மனித நேயம் இல்லாமல் இந்திய மாணவர்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுகின்றனர்.
பல மாணவர்கள் வெளிநாடு செல்லும் ஆசையில் விசா கிடைத்து விமானத்தில் செல்கின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களாலும் குடியேற்ற அதிகாரிகளிடம் அவர்கள் வந்ததற்கான காரணத்தை் சரியாக விளக்க முடியாமலும் நிராகரிக்கப்பட்டு, குற்றவாளிகளைப் போல திருப்பி அனுப்பப்படுகிறார்கள். நாளொன்றுக்கு மூன்று முதல் நான்கு வரை இதுபோன்ற கொடுமைகள் நிகழ்கின்றன. இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியத் தூதரகம் உள்ளிட்டோருக்கும் டேக் செய்து மாணவனுக்கு உதவி செய்யுமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த பதிவைப் பார்த்து, இந்திய மாணவர் நடத்தப்பட்ட விதத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவில் வாழும் இந்திய குடிமக்கள், மாணவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.