தேனிலவு கொலை: என் சகோதரியைத் தூக்கிலிட வேண்டும் -சோனம் சகோதரர்!
மேகாலயாவில் கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சோனம் ரகுவன்ஷியை தூக்கில் போட வேண்டும் என்று அவரது சகோதரர் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் திருமணமாகி 10 நாள்களில் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்றனர்.
அப்போது, காதலன் மற்றும் கூலிப்படையுடன் இணைந்து ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கொலை செய்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது சோனம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை மேகாலயா காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சோனம் ரகுவன்ஷியின் சகோதரர் கோவிந்த், இந்தூரில் உள்ள ராஜா ரகுவன்ஷி இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
“ஆதாரத்தின் அடிப்படையில் சோனம்தான் கொலையைச் செய்திருப்பார் என்று 100 சதவிகிதம் நம்புகிறேன். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ராஜ் குஷ்வாஹாவுடன் தொடர்புடையவர்கள். சோனம் ரகுவன்ஷியுடனான உறவை நாங்கள் முடித்துக்கொண்டோம். ராஜாவின் குடும்பத்திடம் மன்னிப்பு கோருகிறேன்.
சோனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரை தூக்கில் போட வேண்டும்.
சோனத்தை ராஜ் குஷ்வாஹா எப்போதும் சகோதரி என்றே அழைப்பார். கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜ் குஷ்வாஹாவுக்கு சோனம் ராக்கி கட்டியுள்ளார். ராஜாவின் கொலைக்கு நியாயம் கிடைக்க நாங்கள் போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.