அமெரிக்கர்களுக்கு நிரந்தர வரி! டிரம்ப்பை விமர்சித்த எலான் மஸ்க் சகோதரர்!
அதிக வரிவிதிப்பின்மூலம், அமெரிக்க நுகர்வோர் மீது நிரந்தர வரி விதிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்திவிட்டதாக எலான் மஸ்க்கின் சகோதரர் கிம்பல் மஸ்க் விமர்சித்துள்ளார்.
அனைத்து வகையான பொருள்களையும் உற்பத்தி செய்யும் இடத்தில் அமெரிக்கா இல்லாததால், அமெரிக்க நுகர்வோரும் அதிக விலை கொடுத்து இனி பொருள்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அதிக வரி விதிக்கும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார்.
அதிக வரி வசூலிக்கும் இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பை ஏப். 5 முதல் அமலுக்குக் கொண்டுவந்தார். இதன்படி இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.
அமெரிக்காவின் வா்த்தக சரிவை சரிசெய்யும் நோக்கிலும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும் அதிபா் டிரம்ப் அறிவித்துள்ள இந்த பரஸ்பர வரி விதிப்பால், இந்தியா உள்பட பிற நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
இதேபோன்று சீனா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அதிக வரி விதிப்பின்மூலம் அமெரிக்க மக்கள் மீது நிரந்தர வரியை அதிபர் டிரம்ப் விதித்துள்ளதாக எலான் மஸ்க்கின் சகோதரர் கிம்பல் தெரிவித்துள்ளார்.
வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
இந்தத் தலைமுறையில் அதிக வரிகளை விதித்த அதிபராக டிரம்ப் இருப்பார் என்று யார் நினைத்திருக்கக்கூடும். சர்வதேச அளவில் அதிக வரி விதிக்கும் அவரின் யுக்தியின் மூலம், அமெரிக்க மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட நிரந்தர வரியை சுமத்தியுள்ளார்.
வரி விதிப்பின்மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வேலைவாய்ப்பை அதிகரித்தாலும், பொருள்களின் விலை அதிகமாகவே இருக்கும். அனைத்துவகையான பொருள்களையும் நம்மால் (அமெரிக்காவால்) உற்பத்தி செய்ய முடியாததால், நுகர்வோர் அதிக விலைக்கொடுத்து பொருள்களை வாங்கவேண்டியிருக்கும்.
அதிக வரியானது குறைந்த நுகர்வு பொருள்களுக்கு வழிவகுக்கிறது. அதாவது, நுகர்வு பொருள்கள் மீதான அதிக வரியானது, பொருள்களை வாங்கும் அளவைக் குறைக்கும். இதன் எதிரொலியாக வேலைவாய்ப்பும் குறையும்.
அமெரிக்கர்கள் நம்பமுடியாத அளவு வலிமை கொண்டவர்கள். அத்தகைய வலிமையுடன் நாம் செயல்பட வேண்டும். மாறாக திணிக்கப்பட்ட பலவீனத்தை முன்வைத்து அல்ல; இது உலகின் மற்ற நாடுகளுக்கும் பொருந்தும் எனப் பதிவிட்டுள்ளார்.