'ரஜினி சார், சிவகார்த்திகேயன் அண்ணா எங்க படங்களுக்கும் ஆதரவு கொடுங்க'- திருநங்கை...
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை
மதுரை: எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளாா்.
மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களுடன் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
கீழடி அகழாய்வு எனும் பிள்ளையை பெற்றது அதிமுக
அதிமுக ஆட்சியில் இருந்துதான் தமிழகத்தில் 39 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது, கீழடி அகழாய்வு எனும் பிள்ளையை பெற்றது அதிமுக, அந்த பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டு விழா நடத்துகிறது, அதிமுக ஆட்சி கீழடி அகழாய்வுக்கு முக்கியத்துவம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அளித்தது. தற்போது, திமுக ஆட்சியில் நடைபெறும் பிரச்னைகளை மடைமாற்றுவதற்காக மத்திய அரசு கீழடி அகழாய்வு குறித்து ஆதாரம் கேட்டதை பெரிதாக பேசி வருகிறார்கள். கீழடி அகழாய்வை பொதுவாக பேசிவிட முடியாது, அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் கொடுக்கப்படும் அகழாய்வை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது.
கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்
அதிகாரம், ஆணவத்தின் உச்சத்தில் திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செயல்படுகிறார், டி.ஆர்.பி. ராஜாவின் செயல்பாடுகளை சட்ட ரீதியாக சந்திப்போம், அதிமுகவை ஒரு முறை விமர்சித்தால் நாங்கள் 100 முறை விமர்சிப்போம். எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அரசியல் களத்தில் எடப்பாடி பழனிசாமியை குறைத்து மதிப்பிட்டவர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள் என்றார்.
திமுக அரசு ஏன் குதிக்கிகிறது
மேலும், கீழடி அகழாய்வு குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்பது நடைமுறையில் உள்ளது. அகழாய்வில் விளக்கம் கேட்பதும், கொடுப்பதும் நடைமுறையில் உள்ள ஒன்றாகும். அதனை திமுக வெட்ட வெளிச்சமாக்கி விளம்பரம் தேடுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் எங்களிடமும் விளக்கம் கேட்டு இருக்கிறார்கள். அப்போதைய செயலாளர் உதயசந்திரன் விளக்கங்களை கொடுத்து இருக்கிறார். அகழாய்வு குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்பதில் திமுக அரசு ஏன் குதிக்கிகிறது என உதயகுமார் கூறினார்.