தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலும் தோல்வி: தமிழிசை
வேலூர்: தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
நாளை நாங்கள் அனைவரும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறோம். சகோதரி நமீதாவும் கலந்து கொள்கிறார்.
இந்துக்களை பாராபட்சமாக நடத்த முடியாது
முருகன் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதை பார்த்து தமிழக அரசுக்கு பயமும், பதற்றமும் வந்துள்ளது. இதை கண்டித்து ஒருவர் மனித சங்கிலி நடத்துகிறார், மற்றொருவர் அறிக்கை விடுகிறார். மதங்களை வைத்து பிரிக்க முடியாது என பயந்து கொண்டிருக்கிறார்கள் இன்றைக்கே மாநாட்டு பந்தல் நிரம்பி வழிகிறது.
"இனிமேல் இந்துக்களை தமிழக முதல்வர் பாராபட்சமாக நடத்த முடியாது" இதுவரை 3000 குட முழுக்கு நடத்தப்பட்டுள்ளது அதில் ஒன்றில் கூட முதல்வர் கலந்து கொள்ளவில்லை. தீபாவளி விநாயகர் சதுர்த்தி உள்பட ஒரு பண்டிகைக்கு கூட முதல்வர் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
மக்களை ஏமாற்ற முடியாது
திருமாவளவன் கோயிலுக்கு போவது போல் போய்விட்டு அங்கு இந்து மத அடையாளமாக நெற்றியில் வைக்கப்பட்ட திருநீரை அழித்துவிட்டு போஸ் கொடுக்கிறார். இந்துக்கள் தானே நீங்கள் அதை வைத்துக் கொள்வதில் உங்களுக்கு என்ன வெட்கம். அதை அழித்துவிட்டு தான் நீங்கள் போஸ் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது.
முருகன் மாநாடு அரசியல் மாநாடு அல்ல, அரசியல் பேசப் போவதும் அல்ல, ஆனால் அரசியல் பேசாமலேயே அரசியல் மாற்றம் வரும், இது நிச்சயமாக மிகப்பெரிய மாறுதலை தரும்.
திமுகவினருக்கு பதற்றம்
அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து, அமித்ஷா தமிழகம் வந்ததிலிருந்தும், முருகன் மாநாடு நடத்துவது, யோகி ஆதித்யநாத், பவன் கல்யாண் வருவது என அனைத்தும் திமுகவினருக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உங்களுக்கு எந்த அடையாளமும் கிடையாது
நீங்கள் மற்ற மாநிலத்தவரை இங்க அழைக்கும் போது நாங்கள் ஏன் அழைக்க கூடாது. உத்திரப்பிரதேசத்தில் ராமர், கொல்கத்தாவில் காளி, தமிழகத்தில் முருகன் என எங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அடையாளம் உள்ளதாக எங்களை விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் உங்களுக்கு தான் எந்த அடையாளமும் கிடையாது.
உங்களை மாதிரி வேறுபடுத்தி, வேறுபடுத்தி பார்ப்பது நாங்கள் அல்ல. யோகி ஆதித்யநாத் ஏன் வருகிறார் என கேட்கிறார்கள். ஹிந்திக்கு எதிராக பேசும் நீங்கள் ஹிந்தி பேசுபவரை அழைத்து வரும்போது நாங்கள் ஏன் அழைத்து வரக்கூடாது.
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முருகன் மாநாடு
முருகன் எங்களிடம் வேலை கொடுத்துள்ளான். தீமைகளை ஒழிக்க எப்படி சூரசம்காரம் நடந்ததோ அதுபோல தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கக் கூடிய சமூக விரோத நடவடிக்கைகள் தீய நடவடிக்கைகள் ஒழிய முருகன் மாநாடு நடைபெறுகிறது. முருகன் வேல் எங்களுக்கு உதவி செய்யும். முருகன் மாநாடு தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.
முற்றிலும் தோல்வி அடைந்த திமுக அரசு
தற்போது தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரு மாங்காய் குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. தாங்கள் விளைவித்த மாங்காய்களை தெருவில் கொட்டி விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதை பார்க்கும்போது மனதிற்கு வேதனையாக இருக்கிறது.
திமுக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது. திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்த அரசு என்பதற்கு சாலையில் விவசாயிகள் மாங்காய்களை கொட்டி போராடி வருவதே சாட்சி.
தமிழகத்தில் முதல்வர் புதியதாக கல்லூரிகளை திறந்து வைத்ததாக சொல்கிறார். ஆனால், 37 கல்லூரியில் ஒருவர் கூட புதியதாக நியமிக்கப்படவில்லை.
கீழடி தொடர்பாக திமுக மாணவர் அணி போராடியது வெற்றி என எப்படி முதல்வர் சொல்லுவார், கீழடியில் ஆராய்ச்சி நடந்தது முழுக்க முழுக்க பாஜக ஆட்சியில் வந்தது தான். முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சொன்னதும் சரிதான். ஆனால் இப்போது திமுக நாங்கள் தான் என சொல்வது தவறு. ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சியில் தமிழக பாரம்பரியத்தை நிரூபித்தது பாஜக தான்.
தேசிய ஜனநாயக கூட்டணி
விசிக என்னைக்காவது மலம் கலந்த தண்ணீருக்காகவும் போராடி உள்ளதா? என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, "இன்னும் பத்து மாதம் கழித்து ஒரு அழகான குழந்தை பிறக்க இருக்கிறது, அந்த குழந்தையின் பெயர் தேசிய ஜனநாயக கூட்டணி. அந்த குழந்தை தான் தமிழகத்தில் முடி சூடப் போகிறது.
மக்களோடு ஸ்டாலின் இல்லை
உங்களோடு ஸ்டாலின் என்பது இருக்கட்டும். மக்களோடு ஸ்டாலின் இல்லை. மக்களோடு ஸ்டாலினாக இருந்தால் பாலியல் தொல்லைகள், கொலைகள், கற்பழிப்புகள் காவல் நிலையங்கள் சூறையாடல் நடக்காது. உங்களோடு ஸ்டாலின் என்றால் உங்களோடு மட்டுமே இருக்க வேண்டியதுதானே என தமிழிசை கூறினார்.