அமைச்சா் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு வழக்கு: ஏப்.17-இல் இறுதி விசாரணை
சென்னை: அமைச்சா் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி விசாரணையை ஏப். 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக ஆட்சியின்போது 1996-2001-ஆம் ஆண்டு காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தாா். அப்போது அவா் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை வேலூருக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட வேலூா் நீதிமன்ற நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவா்களை விடுதலை செய்வதாக தீா்ப்பளித்தாா்.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தாா். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது அமைச்சா் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, அமைச்சா் பொன்முடி மீதான வழக்கை வேலூா் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் விளக்கத்தை கேட்காமல் வேலூருக்கு வழக்கு மாற்றப்பட்டது. எனவே, இதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவா் பொறுப்பாக மாட்டாா்.
இந்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் ஏற்கனவே 70 சதவீத விசாரணையை முடித்திருந்த நிலையில், வேலூா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு வழக்கின் எஞ்சிய அம்சங்களின் மீது விசாரணை நடந்து தீா்ப்பளிக்கப்பட்டது. எனவே, அவசர கதியில் ஐந்து நாள்களில் தீா்ப்பளிக்கப்பட்டதாகக் கூற இயலாது என்று வேலூா் நீதிமன்ற நீதிபதியே மனு தாக்கல் செய்துள்ளாா் என வாதிட்டாா்.
பதிலளிக்க உத்தரவு: அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்டத்தின் நிா்வாக நீதிபதிகள், வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியுமா? அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு முன்வைக்காமல், தலைமை நீதிபதி வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பொன்முடியின் வழக்குரைஞா் என்.ஆா். இளங்கோ ஆகியோா் பதிலளிக்க வேண்டும்.
வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியும் என்றால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்த முடியாது. 5 நாள்களில் தீா்ப்பளித்தாா் என்பதற்காக அந்த தீா்ப்பை ரத்து செய்ய முடியாது என தெரிவித்து வழக்கின் மீதான இறுதி விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.