தண்ணீர் பேரலுக்குள் 6 மாத குழந்தை மரணம்; தாயிடம் போலீஸார் தீவிர விசாரணை! - நடந்தது என்ன?
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது: 29). இவர், மகராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குளவாய்பட்டியை சேர்ந்த லாவண்யா (வயது: 21) என்பரை திருமணம் செய்துள்ளர்.
இந்நிலையில், இவர்களுக்கு 6 மாதத்தில் ஆதிரன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த தம்பதிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், லாவண்யா தனது கணவரோடு கோபித்துக் கொண்டு அவரின் தந்தை வீடான புலியூருக்கு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், தந்தை வீட்டில் தங்கி இருந்த லாவண்யா அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு வெளியில் பாத்ரூம் சென்றார். அப்போது, மர்ம நபர்கள் இரண்டு பேர் தனது வாயில் துணியை வைத்து அழுத்தி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயின் அறுத்து கொண்டும், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஆதிரன் தூக்கிக்கொண்டும் சென்றுவிட்டதாக கூறி, மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, லாவண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை தேடியுள்ளனர். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து குழந்தை வீட்டிற்கு வெளியில் உள்ள தண்ணீர் பேரலில் இறந்து மிதந்துள்ளது. இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூர் டி.எஸ்.பி மணிமாறன், இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் இறந்த குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி அபிஷேக்குப்தா சம்பவம் குறித்து கேட்டறித்து, விசாரணையை துரிதப்படுத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், அந்த அந்த குழந்தையின் தாயார் தான் குழந்தையை கொன்றிருக்க வேண்டும் என்று மணிகண்டன் உறவினர்கள் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், லாவண்யாவிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சமீபத்தில் அந்த குழந்தைக்கு மருந்து கொடுக்கும் பொது உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம். இதனால், திருச்சியில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை சேர்த்து, அவருக்கு ரூ. 5 லட்சம் வரை செலவு செய்து அவரை குணமாக்கி அழைத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் தான், அந்த ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்துபோயுள்ளது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கீரனூர் காவல் நிலைய போலீஸார், அந்த குழந்தையின் தாய் லாவண்யாவிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பிறந்து 6 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று மர்மமான முறையில் இறந்துபோயுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
