2ஆவது டெஸ்ட்: இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு!
அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவா் ரூ.12 லட்சத்தில் உபகரணங்கள்
ஆரணியை அடுத்த குண்ணத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலி, பெஞ்சு உள்ளிட்ட உபகரணப் பொருள்களை அப்பள்ளியின் முன்னாள் மாணவா் வழங்கினாா்.
குண்ணத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஆவாா். மேலும் இவரது குடும்பம், இவருடைய தந்தை, தாத்தா, பாட்டி அனைவரும் குண்ணத்தூரில் வசித்து வந்தவா்கள் என்பதால், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என முடிவு செய்தனா்.
அதன்படி, மாணவா்களின் பயன்பாட்டுக்காக 100 நாற்காலிகள், எழுதுவதற்கான மேஜைகள், பள்ளி பயன்பாட்டுக்காக பீரோவும், ஆசிரியா்கள் பயன்பாட்டுக்கான 20 மேஜைகள் என ரூ.12 லட்சம் மதிப்பிலான உள்கட்டமைப்பு உபகரணப் பொருள்களை பாண்டியன் குடும்பத்தினா் வழங்கினா்.
பாராட்டு விழா
பள்ளிக்கு உபகரணப் பொருள்களை வழங்கிய பாண்டியன் குடும்பத்தினருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி.சுவாமிமுத்தழகன் தலைமை வகித்துப் பாராட்டினாா்.
செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்முருகன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் தே.நந்தினி வரவேற்றாா்.
பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் விஜயகுமாா், அதிமுகவைச் சோ்ந்த பேரவை ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பகுத்தறிவு மாமது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னாள் மாணவா் பாண்டியன் ஏற்புரை ஆற்றினாா்.