`அரிதிலும் அரிதான வழக்கு’ அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர் புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24 ம் தேதி புகார் அளித்தார்.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஞானசேகரனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 தேதி கைது செய்தனர்.
பின்னர் கோட்டூர்புரம் காவல்துறை விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 28 ம் தேதி பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் ஆளும் திமுக கட்சியை சேர்ந்தவர் என்னும் குற்றச்சாட்டு கிளம்ப, இந்த விவகாரம் தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் புகார் சொன்ன மாணவி பாலியல் கொடுமை நடந்த அன்று ஞானசேகரன் வேறு ஒருவரிடம் போனில் பேசியதாகவும் அவரை சார் என அழைத்ததாகவும் புகாரில் சொன்னதாக தகவல் பரவ 'யார் அந்த சார்?’ என்னும் கேள்வியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலானாய்வு குழு, கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதி சென்னை சைதாப்பேட்டை 9 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்த வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டது.
பின்னர் இந்த வழக்கின் விசாரணையை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7 ம் தேதி மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8 ம் தேதி தள்ளுபடி செய்து அன்றைய தினமே குற்றச்சாட்டு பதிவு செய்தது.

அதில் பாலியல் வன்கொடுமை, ஆதராங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல், மிரட்டல், அந்தரங்க புகைப்படம் எடுத்து வெளியிட்டது, பெண் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மற்றும் பி.என்.எஸ்.எஸ் சட்டத்தின் 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டது.
இதனையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 23 ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது, தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.
குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் காவல்துறை தரப்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

கடந்த 20ம் தேதி வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன்வைத்தவர்.
ஞானசேகரன் குற்றவாளி
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, "குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து நிரூபிக்கபட்டுள்ளது. அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளது" என்று வாதிட்டார். மேலும் இவர் தான் குற்றம் புரிந்து உள்ளார் எனவே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை. எனவே வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று 10.30 மணிக்கு தீர்ப்பை வாசித்தார்.
அதில், ``அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி” என அறிவித்தார். மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள 12 பிரிவுகளில் 11 பிரிவுகளிலும் அவர் குற்றிவாளி நிரூபிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அரிதிலும் அரிதான வழக்கு எனவே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என ஞானசேகரன் கோரிக்கை வைத்தார். தனக்கு பெண்குழந்தை உள்ளது எனவும் 8 வது படிக்கிறார் என்றும் அம்மா மட்டும் தான் அப்பா இல்லை. அம்மாவுக்கும் உடல்நலமில்லை என்றெல்லால் சொல்லி குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி, தனக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் அளித்து 5 மாதத்தில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.