4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!
Waqf Bill: `முஸ்லிம் மறுமை, இந்து மோட்சம், கிறிஸ்தவ அர்பணிப்பு, ஆகமொத்தம்..' - உச்ச நீதிமன்ற நீதிபதி
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான இடைக்காலத் தடை விதித்திருந்த உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத் திருத்தம் தொடர்பான வாதங்களை உச்ச நீதிமன்றம் கேட்டு வருகிறது. மூன்றாம் நாளான நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விவாதம் நடந்தது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிஸிட்டர் ஜெனரல் தூஷர் மேத்தா, ``வக்ஃப் என்பது தர்மம், அவ்வளவுதான். அது இஸ்லாத்தின் மிக முக்கியமானப் பகுதி அல்ல" என்றார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், ``இந்து மதத்தின் வேதங்களின்படி, கோயில்கள் மிகமுக்கியமானவை அல்ல. இயற்கையை வணங்குவதற்குதன் விதி இருக்கிறது. உதாரணமாக நெருப்பு, நீர், மழை, மலை, கடல் என ஒவ்வொன்றுக்கும் தனிக் கடவுள்கள் இருக்கின்றன. எனவே இயற்கையை வணங்குவதுதான் அவசியம்." என பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ``வக்ஃப் என்பது கடவுளுக்கென அர்ப்பணிக்கப்பட்டது. அது சமூகத் தொண்டுக்காக வழங்கப்பட்டது. ஒருமுறை கொடுத்தால், கொடுத்தவரேக் கூட திரும்பப் பெற முடியாது" என்றார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி கவாய், ``தொண்டு என்பது எல்லா மதங்களின் அடிப்படைக் கொள்கையாகும்" என்றார்.
இதற்கு பதிலளித்த கபில் சிபல், ``மற்ற மத தர்மத்துக்கும் வக்ஃப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி இது வெறும் தொண்டுக்காக மட்டுமல்ல, மறுமையில் இந்த சொத்துக்களின் மூலம் ஆன்மீக நன்மையை நோக்கமாகக் கொண்டது. எனவே இது சமூக நலனை மட்டுமல்ல, தெய்வீக நோக்கங்களுக்கு சேவை செய்யும் நோக்கம் கொண்ட ஒரு பக்திச் செயலாகும்" எனத் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி, ``வக்ஃப், மறுமை வாழ்க்கைக்காக கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு காணிக்கை. அதேப் போல இந்து மதம் மோட்சம் என அதைக் குறிப்பிடுகிறது. கிறிஸ்துவத்திலும் இதுபோல அர்பணிப்பு இருக்கிறது. ஆகமொத்தம் நாம் அனைவரும் சொர்க்கத்திற்குச் செல்ல பாடுபடுகிறோம்" என்றார்.
இந்த விவாதங்களுக்கு பிறகு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.