அவிநாசியில் இனம் கண்டறியாத 48 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை!
அவிநாசி வட்டத்தில் புஞ்சைத்தாமரைக்குளம், பாப்பாங்குளம் கிராமங்களில் இனம் கண்டறியாத 48 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், புஞ்சைத்தாமரைக்குளம், பாப்பாங்குளம் ஆகிய கிராமங்களில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் நிலமெடுப்பு செய்து குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக்கொள்வதற்காக 166 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ் நிலம் மென்பொருளில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளை இணையவழி பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிக்காக மேற்படி மனையிடங்களில் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், புஞ்சைத்தாமரைக்குளத்தில் 26 பயனாளிகளையும், பாப்பாங்குளத்தில் 22 பயனாளிகளையும் இனம் கண்டறியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டாவில் உள்ள நிபந்தனையின்படி குறிப்பிட்ட காலத்துக்குள் குடியிருப்பு அமைத்து குடியிருக்காமல் நிபந்தனை மீறியுள்ளதால் மேற்படி இடத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலருக்கோ அனுப்பிவைக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது