ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்துகள், ரூ.912 கோடி பணம் முடக்கம்!
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.912 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சென்னையில் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையின்போது பல்வேறு ஆவணங்களும், டிஜிட்டல் முறையில் இருந்த தகவல்களும் திரட்டப்பட்டன.
அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, அதன் தொடர்ச்சியாக தொழிலதிபரின் சுமார் 1000 கோடி ரூபாய் சொத்துகளின் ஆவணங்களை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், ஆண்டாள் ஆறுமுகம் பெயரில், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்ட ரூ.912 கோடி பணத்தையும் முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம், சென்னையில், ஆண்டாள் ஆறுமுகத்துக்குத் தொடர்புடைய மூன்று இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆண்டாள் ஆறுமுகத்துக்குச் சொந்தமான ஆர்கேஎம் பவர்ஜென் தனியார் நிறுவனத்தின் மீது பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 விதிகளின் கீழ் நடந்து வரும் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.