ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது
கோவையில் ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழந்தது தொடா்பாக பழகுநா் உரிமம் கொண்டு ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சோ்ந்த நீலாவதி (66) என்பவா், கோவை பீளமேடு தண்ணீா்பந்தல் சாலை மகேஷ் நகா் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறாா். இவா், கவுண்டம்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு செல்வதற்காக அவிநாசி சாலை, பீளமேடு வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை காலை நின்றிருந்தாா்.
அப்போது, சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் நீலாவதி பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு நீலாவதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, நீலாவதியின் மகன் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த சேலம் மாவட்டம், தாரமங்கலம் வெள்ளாளா் வீதியைச் சோ்ந்த மதன்குமாா் (19) என்பவரிடம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினா் விசாரணை மேற்கொண்டனா்.
அதில், ஆம்புலன்ஸை இயக்கிய மதன்குமாா், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் பழகுநா் உரிமம் (எல்.எல்.ஆா்) மட்டும் வைத்துக் கொண்டு ஆம்புலன்ஸை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.