ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!
இந்தித் திணிப்பு: "இட்லி, தோசை போதும்; பூரி, பரோட்டா வேண்டாம்" - எம்.பி கதிர் ஆனந்த் சொல்வதென்ன?
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் கலந்துகொண்டு பேசும்போது, ``பத்து வருடங்களுக்கு முன்பு காட்பாடியில் குடிக்கச் சொட்டுத் தண்ணீர் கூட கிடையாது. போர் போட்டால் உப்புத் தண்ணீர்தான் வரும். இந்த பிரச்னை குறித்து அன்று இருந்த முதலமைச்சர் கலைஞரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். உடனடியாக கலைஞர் தன் மகனான இன்றைய முதலமைச்சரை அழைத்தார். `என் தம்பி துரைமுருகனின் தொகுதியில் குடி தண்ணீரே இல்லையாம். என்ன செய்யலாம்?’ என்று கேட்டார் கலைஞர்.
பாலாற்றில் போர் போட்டு தண்ணீர் எடுத்துத் தரப்போகிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், ஸ்டாலின் ஒரு தீர்க்கதரிசி. என்ன நினைத்தார் தெரியுமா? காட்பாடிக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றால், சுற்றுவட்டாரத்தில் எங்கு ஜீவநதி இருக்கிறது என்று தேடிப் பார்த்தார். ஜீவநதி, அணைக்கட்டு பகுதியில் இல்லை; ஆம்பூரில் இல்லை; வாணியம்பாடியில் இல்லை; கிருஷ்ணகிரியிலும் இல்லை, தருமபுரி பக்கத்தில் காவேரி தண்ணீர் இருக்கிறது என்று தெரிந்தவுடன் அங்கிருந்து வேலூர், காட்பாடி, சோளிங்கர் வரை கொண்டு வந்து... கிட்டத்தட்ட இருபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பைப்லைன் அமைத்து தண்ணீர் வழங்கினார்.
இந்த மாவட்டத்துக்குக் கிழக்கே இருக்கக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் சுத்தமான தண்ணீர் குடிக்கிறார்கள் என்று சொன்னால், அதற்கு வித்திட்டவர் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின்தான். எத்தனையோ எதிர்ப்புகளைக் கடந்து முதலமைச்சராக வந்திருக்கிறார். `மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சராக எந்த தகுதியுமே இல்லை’ என்று பல பேர் சொன்னாலும், `அப்படிக் கிடையாது’ என்று தமிழ்நாட்டு மக்கள் ஸ்டாலினைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், இன்றைக்கு அற்புதமான ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்.
`உங்களுடைய பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மட்டும் தான் கற்றுக்கொடுக்கிறீர்கள். ஏன் இந்தி கற்றுத் தருவதில்லை. எனவே, ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கமாட்டோம்’ என்று மத்திய சர்க்கார் சொல்கிறது. எங்கள் அரசுப் பள்ளிகளில் தமிழ் படிக்கிறான்; ஆங்கிலம் படிக்கிறான், இந்தி தேவைப்பட்டால் வெளியே சென்று கற்றுக்கொள்ளட்டும். அதற்கு ஏன் இந்தியைக் கட்டாயம் ஆக்குகிறீர்கள் என்று கேட்டோம். ஹோட்டலுக்கு போகிறீர்கள். என்ன வேண்டுமோ, அதைத் தானே கேட்டு வாங்கி சாப்பிடுவீர்கள். இட்லி வேண்டும், தோசை வேண்டும்; பூரி வேண்டாம், பரோட்டா வேண்டாம், என் வயிற்றுக்கு இரண்டு தோசையே போதும் என்று தானே சொல்வீர்கள். ஆனால், உங்களுக்குத் தேவையானதை நீங்கள் கேட்டுப் பெறாமல்... உங்கள் மீது திணித்தால், அதற்குப் பெயர்தான் திணிப்பு. இதேபோல்தான் இந்தித் திணிப்பும். இந்தியைத் திணிக்காதே. பையனுக்கு இந்தி வேண்டுமென்றால் டியூஷன் போய் இந்தி பேசும் ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளட்டும்.
எங்கய்யா... இந்தி பேசுகிறார்கள். குஜாராத் போனால் குஜராத்தி பேசுகிறார்கள்; ஆந்திராவுக்குப் போனால் தெலுங்கு பேசுகிறார்கள்; கர்நாடகாவுக்குப் போனால் கன்னடம் பேசுகிறார்கள்; கேரளாவுக்குப் போனால் மலையாளம் பேசுகிறார்கள். ஆனால், `தமிழ்நாட்டில் இனி தமிழ் பேசக்கூடாது... இந்திதான் பேசவேண்டும்’ என்று சொல்லித் திணிக்கின்றனர். `அட பாவிகளா... இது அண்ணா நாடு; பெரியார் நாடு, தமிழ்நாடு எனப் பெயர் வைத்த பூமிடா. இங்குப் போய் தமிழ் வேண்டாம் என்பது தவறு’ என்று முதலமைச்சர் எழுந்து நின்று சொன்னார். இங்கு இருக்கின்ற தாய்மார்களைப் பார்த்துக் கேட்கிறேன். உங்கள் மகன் தமிழ் படிக்கக் கூடாதா?
ஆங்கிலம் படித்துவிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்யலாம். அந்த மொழி வேண்டாமா? ஆக... மொழி கொள்கையை நாங்கள் எதிர்கின்றோம். இங்கே இருக்கின்ற அத்தனை தாய்மார்களின் பாதங்களையும் தொட்டுக் கேட்கிறேன். இந்த சட்டப் போராட்டத்துக்கு, இந்த மொழிப் போராட்டத்துக்கு நம்முடைய முதலமைச்சர் எழுந்து நிற்கிறாரே... இவருக்குத் துணையாக நிற்பீர்களா, நிற்க மாட்டீர்களா? இப்படிப்பட்ட மொழிப் போராட்டத்துக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற முதலமைச்சரை நீங்கள் அனைவரும் வாழ்த்த வேண்டும். நோய் நொடியின்றி இன்னும் 100 ஆண்டுக் காலத்துக்கு அவர் இந்த தமிழ்நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டும்’’ என்றார் கதிர் ஆனந்த்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
