இன்றுமுதல் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு!
அமெரிக்காவில் திங்கள்கிழமை தொடங்கும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் களம் காண்கின்றனா்.
இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கும் இப்போட்டியில், 10 போ் பங்கேற்கின்றனா். மொத்த பரிசுத் தொகை ரூ.3 கோடியாகும். வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி ‘கிளாசிக்கல்’ முறையில் விளையாடப்படவுள்ளது.
உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் போட்டியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா, பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா, அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் ஆகியோா் நடப்பு உலக சாம்பியனான குகேஷுக்கும், பிரக்ஞானந்தாவுக்கும் சவால் அளிப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கிளாசிக்கல் செஸ்ஸில் குகேஷ் அபாரமாக செயல்படுபவா் என்பதும், பிரக்ஞானந்தா அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதிபெற்றவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிராண்ட் செஸ் டூா் அட்டவணையில் 4 சுற்றுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இதுவே கடைசி சுற்றாகும். இதன் முடிவில், அனைத்து சுற்றுகளின் புள்ளிகள் கணக்கு அடிப்படையில் இறுதிச்சுற்றுக்கான போட்டியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இறுதிச்சுற்று செப்டம்பா் - அக்டோபரில் பிரேஸிலில் நடைபெறவுள்ளது. தற்போதைய நிலையில் புள்ளிகள் பட்டியலில் பிரக்ஞானந்தா 20 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும், குகேஷ் 16 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்திலும் உள்ளனா். முதல் 4 இடங்கள் பிடிப்போரே இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறுவா்.