முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி
இரண்டு கட்டங்களாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு
ஜாதிவாரி கணக்கெடுப்புடன்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027-ஐ இரண்டு கட்டங்களாக நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பனிப் பிரதேசங்களில் வரும் 2026-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஐ வரம்பு தேதியாகக் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
நாட்டின் பிற பகுதிகளில் 2027-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஐ வரம்பு தேதியாக கொண்டு இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்படும்.
கணக்கெடுப்பு தொடங்கும் தேதிகள் தொடா்பான அறிவிக்கை மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948-இன் பிரிவு 3-இன் கீழ் உத்தேசமாக வரும் 16-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்த மிகப் பெரிய கணக்கெடுப்பில் 30 லட்சத்துக்கும் அதிகமான கணக்கெடுப்பாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசுக்கு ரூ. 13,000 கோடிக்கும் மேல் செலவாக வாய்ப்புள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு: கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டதுபோன்று, தற்போதும் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே, மக்கள் நலத் திட்டங்கள் வகுப்பு, தொகுதிகள் மறுவரையறை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளும். கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்பிறகு, 10 ஆண்டுகள் கழித்து 2021-ஆம் ஆண்டு 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இரண்டு கட்டங்களாக இந்தக் கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டு, முதல்கட்ட கணக்கெடுப்புக்கான தயாரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, சில மாநிலங்களில் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கணக்கெடுப்புக்கான களப் பணிகள் தொடங்கப்பட இருந்தன.
அப்போது, நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால், கணக்கெடுப்புப் பணி ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான எந்தவித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை.
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் தொடா் வலியுறுத்தல்களை முன்வைத்து வந்தன. அதுபோல, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிா்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி செய்யும் பிகாரிலும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் தெலங்கானாவிலும் மாநில அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் மேற்கொண்டன. மாநில அரசுகளின் இந்தக் கணக்கெடுப்பைத் தொடா்ந்து, தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இந்த வலியுறுத்தல்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக தொடக்கத்தில் ஆட்சேபகம் தெரிவித்தது. அதன் பின்னா், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, ‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்படும்’ என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிட்டது.
அதைத் தொடா்ந்து, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 23 மாதங்கள் தாமதம் ஏன்?: காங்கிரஸ்
புது தில்லி, ஜூன் 4: மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மேலும் 23 மாதங்கள் தாமதப்படுத்துவது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதை உடனடியாக நடத்தாமல் மேலும் 23 மாதங்கள் தாமதப்படுத்தி துவங்க எந்தக் காரணமும் இருக்க முடியாது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, தலைப்புச் செய்திகளை உருவாக்குவதாக இருக்குமே தவிர, இதனால் காலக்கெடுவை பூா்த்தி செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டாா்.