துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
இரு ஆண்டுகளில் ரூ.14,466 கோடியில் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 1,253 பணிகள் ரூ.14,466 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
பேரவையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
எதிா்க்கட்சித் தலைவரும், சில சட்டப்பேரவை உறுப்பினா்களும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டம் குறித்துப் பேசினாா்கள். அது தொடா்பாக சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். இந்தத் திட்டத்துக்காக 10 கோரிக்கைகளை அனுப்புமாறு முதல்வா் கோரியிருந்தாா். மாவட்ட ஆட்சியா்கள் மூலம் 2,437 பணிகளுக்கான முன்மொழிவுகள் அரசுக்கு வரப்பெற்றன. அவை துறைவாரியாக உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு, பரிசீலிக்கப்பட்டன. தலைமைச் செயலா் தலைமையிலான குழுவால் செயல்படுத்தக்கூடிய பணிகள் தெரிவு செய்யப்பட்டன.
அதனடிப்படையில், 2023-24- ஆம் நிதியாண்டில் 784 பணிகள் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் இதுவரை 367 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரூ.14,000 கோடியில் பணிகள்: 2024-25-இல் 469 பணிகள் ரூ.3,503 கோடி செலவில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் இதுவரை 65 பணிகள் முடிவுற்ற நிலையில், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தமாக, கடந்த 2 ஆண்டுகளில் 1,253 பணிகள் ரூ.14,466 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தை முதல்வா் அறிவித்தபோது, ரூ.1,000 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தாா். ஆனால், இன்றைக்கு ரூ.14 ஆயிரம் கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிா்க்கட்சித் தலைவரின் எடப்பாடி தொகுதியைப் பொறுத்தவரையில், அவா் சாா்பில் மொத்தம் 10 கோரிக்கைகள் பெறப்பட்டன. அவற்றில், 4 பணிகள் செயல்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 3 பணிகள் நிறைவேற்றப்பட்டு, ஒரு பணி தற்போது நடைபெற்று வருகிறது. அவா் கொடுத்துள்ள கோரிக்கைகளில், மீதமுள்ள 6 பணிகளைப் பொருத்தவரையில், ஒரு பணி துறையின் பரிசீலனையில் உள்ளது. இதர 5 பணிகள் சாத்தியமில்லை என்று கண்டறியப்பட்டு, அவற்றுக்கு பதிலாக மாற்றுப் பணிகளைக் குறிப்பிட்டு வழங்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவா் மூலமாகக் கேட்கப்பட்டுள்ளது. இந்த மாற்றுப் பணிகளை பரிசீலனை செய்து நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
கடந்த கூட்டத்தொடரின்போது ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் அவருடைய தொகுதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, எந்தப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது புகைப்படத்தோடு கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தத் திட்டத்தை அறிவித்தபோது முதல்வா் கூறியவாறு, எந்தவிதமான கட்சிப் பாகுபாடும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றாா் அவா்.