உக்ரைனுக்கு ஆயுத சப்ளை நிறுத்தம் - அமெரிக்கா சொல்வது என்ன?
ரஷ்யா - உக்ரைனுக்கு மத்தியில் தொடர்ந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்தவரை அவரின் நிலைப்பாடு ரஷ்யாவுக்கு எதிராகவே இருந்தது.
அதனால், உக்ரைனுக்கு தேவையான உதவிகளை செய்துவந்தார். ஆனால், அவரின் பதவிகாலத்துக்குப் பிறகு, அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப் ரஷ்யாவுடன் நட்புபாராட்டி வருகிறார்.
சிக்கலில் முடிந்த பேச்சுவார்த்தை
இதன் காரணமாக, உக்ரைனுடனான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ஊடகங்கள் முன்னிலையில் அதிபர் ட்ரம்ப்புடனும், துணை அதிபர் ஜேடி.வான்ஸுடனும் உக்ரைன் அதிபருக்கு ஏற்பட்ட வார்த்தைப் போரால் தற்போது நிலைமை சிக்கலாகியிருக்கிறது.

அமெரிக்கா உக்ரைன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும், நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என உறுதியாக நின்றார் ஜெலன்ஸ்கி. இதற்கிடையில் ஐரோப்பா நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன.
அதே நேரம், அமெரிக்காவும், ரஷ்யாவும் ஜெலன்ஸ்கிக்கு அமைதி தேவையில்லை. அவருக்கு அதிபர் பதவிதான் தேவை எனக் கூறி விமர்சித்திருந்தனர். இந்த நிலையில்தான் அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த ஆயுத சப்ளையை நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
வெள்ளை மாளிகை அதிகாரி அறிக்கை
நேற்று செய்தியாளர்களை சந்தித்த டரம்ப், ``ஜெலென்ஸ்கியின் எதிர்மறையான நிலைப்பாட்டை நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டேன். உக்ரைன் அமெரிக்காவின் உதவிக்கு நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி, ``செய்தியாளர்கள் டரம்ப்பிடம் உக்ரைனுக்குக்கான ஆயுத சப்ளையை நிறுத்துவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது நிறுத்தமாட்டோம் என மறுத்துவிட்டார். ஆனால், அமைதியை கொண்டுவருவதற்கு கவனம் செலுத்துவதில் தெளிவாக இருக்கிறார். எனவே தற்போது ஆயுத சப்ளையை நிறுத்தும் முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எங்களோடு நட்பு பாரட்டும் நாடுகளும் இதே உறுதியில் இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
