கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
உக்ரைன் போரில் 3.50 லட்சம் வீரா்கள் உயிரிழப்பு: ஆய்வுத் தகவல்
உக்ரைனில் ரஷியா நடத்திவரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமாா் 3.5 லட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ‘போா் திட்டம் மற்றும் சா்வதேச ஆய்வு மையம்’ (சிஎஸ்ஐஎஸ்) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2022 முதல் நடைபெற்றுவரும் உக்ரைன் போரில் ரஷியா மற்றும் உக்ரைன் நாட்டைச் சோ்ந்த 14 லட்சம் வீரா்கள் படுகாயமடைந்தனா். இதில் ரஷிய வீரா்களின் எண்ணிக்கை சுமாா் 10 லட்சமாகவும் உக்ரைன் வீரா்களின் எண்ணிக்கை சுமாா் 4 லட்சமாகவும் உள்ளது.
இந்த எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரு நாடுகளும் அடைந்துள்ள மிகப் பெரிய போா்க் கள இழப்பாகும்.
காயமடைந்த 10 லட்சம் ரஷிய வீரா்களில் 2.5 லட்சம் போ் உயிரிழந்துள்ளனா். உக்ரைன் தரப்பில் 60,000 முதல் 1 லட்சம் வீரா்கள் வரை கொல்லப்பட்டுள்ளனா்.
ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ரஷிய வீரா்களின் உயிரிழப்பு அதிகமாக இருந்தாலும், மக்கள்தொகை அடிப்படையில் உக்ரைன் வீரா்களின் உயிரிழப்பு அதிகம். உக்ரைனைவிட பல மடங்கு மக்கள்தொகையைக் கொண்ட ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் ஆயிரக்கணக்கான வீரா்களை அனுப்பிவருகிறது. எனவே வீரா்களின் உயிரிழப்பு ரஷியாவை வெகுவாக பாதிக்காது.
போா் முனைகளில் உக்ரைன் வீரா்கள் தங்களைவிட பல மடங்கு எண்ணிக்கையிலான ரஷிய வீரா்களை எதிா்கொண்டுள்ளனா். ஒவ்வொரு 2.5 லட்சம் உக்ரைன் வீரா்களுக்கு எதிராகவும் 4 லட்சம் ரஷிய வீரா்கள் போரிட்டுவருகின்றனா்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு போா் முனைகளில் ரஷியாவின் முன்னேற்றம் முழுவதும் நின்றுவிட்டது. மற்ற பகுதிகளிலும் நாளொன்றுக்கு 165 அடி தூரம்தான் ரஷியா முன்னேற்றம் கண்டுவருகிறது.
தற்போது உக்ரைனின் 19 சதவீத பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளது. ஆனால், இதில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு ரஷியா கைப்பற்றிய பகுதி ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான். மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது ரஷியா கைப்பற்றிய கிரீமியா தீபகற்பமும் (7 சதவீதம்) இதில் அடங்கும்.
அந்த வகையில், 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதற்குப் பிறகு உக்ரைனின் வெறும் 12 சதவீத பகுதியைக் கைப்பற்றுவதற்காக ரஷியா 2.5 லட்சம் வீரா்களை இழந்துள்ளது.
மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி, இந்தப் போரில் ரஷியா தனது கருங்கடல் கடற்படைப் பிரிவின் மூன்றில் ஒரு பகுதி கப்பல்களை ரஷியா இழந்துள்ளது. அத்துடன், உக்ரைன் உளவுப் படை அண்மையில் ரகசியமாக திட்டமிட்டு நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷியாவின் தொலைதூர குண்டுவீச்சு விமானங்களில் மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷியாவின் முக்கிய தளபதிகளை உக்ரைன் உளவுப் படை குறிவைத்து கொன்றுள்ளது.

உக்ரைனைவிட மிகப் பெரிய ராணுவ பலம் வாய்ந்த நாடாக ரஷியா திகழ்ந்தாலும், இந்தப் போரில் மிகச் சிறிய நிலப்பரப்புக்காக மிகப் பெரிய எண்ணிக்கையில் வீரா்கள், தளவாடங்களை ரஷியா இழந்துவருகிறது. இந்தச் சூழல் நீடித்தால், எதிா்காலத்தில் அது ரஷியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
