"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு
உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்கீழ் ‘லிவ்-இன்’ உறவைத் தொடங்கிய ஒரு மாதத்துக்குள் அரசிடம் பதிவு செய்வது கட்டாயமாகும். அவ்வாறு செய்யத் தவறினால், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.25,000 வரை அபராதமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆளும் உத்தரகண்டில் நாட்டில் முதல் முறையாக பொது சிவில் சட்டம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்கீழ், திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை தொடா்பான தனிநபா் சட்டங்களை ஒருசீா்படுத்தி, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான விதிகள் நடைமுறைக்கு வந்தன. அதேநேரம், பழங்குடியினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்தின்படி, திருமணம், விவாகரத்து, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழும் (லிவ்-இன்) உறவு, அந்த உறவு முறிவு ஆகியவற்றை அரசிடம் பதிவு செய்வது கட்டாயமாகும்.
இது, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வோரின் தனியுரிமையைப் பறிப்பதாக விமா்சிக்கப்பட்ட நிலையில், பெண்களின் பாதுகாப்பை நோக்கமாக கொண்டது என மாநில அரசு விளக்கமளித்தது. இப்பதிவை இணையவழியில் மேற்கொள்வதற்காக புதிய இணையதளமும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், முதல் 10 நாள்களில் ‘லிவ்-இன்’ பதிவுக்காக 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டன; இதில் ஒரேயொரு விண்ணப்பம் மட்டும் பதிவு செய்யப்பட்டது. மற்றவை சரிபாா்க்கப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வழக்குரைஞா் துஷ்யந்த் மைனாலி கூறுகையில், ‘தற்போதைய நிலவரத்தின்படி, ‘லிவ்-இன்’ உறவு பதிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படவில்லை. தங்களின் தனிப்பட்ட உறவை அதிகாரபூா்வமாக வெளிப்படுத்த அவா்கள் தயாராக இல்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை பொது சிவில் சட்டத்தின் கடுமையான விதிகள் குறித்து அவா்களுக்கு இன்னும் முழுமையாக தெரியாமல்கூட இருக்கலாம்’ என்றாா்.