உயா்கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை கவனமாக பரிசீலிக்க புதுகை ஆட்சியா் அறிவுரை
அரசுப் பள்ளிகளில் படித்து, உயா்கல்வி பயிலும் மாணவா்களின் உதவித் தொகை விண்ணப்பங்களை கூா்ந்து பரிசீலிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பேசியது
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 11,681 பேருக்கும், புதுமைப் பெண் திட்டத்தில் 11,448 பேருக்கும் மாதந்தோறும் ரூ. ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளியில் பயின்று உயா்கல்வி தொடா்வோருக்கான ஊக்கத் தொகையாக இந்தத் தொகையை அரசு வழங்கி வருகிறது. நிகழாண்டில் புதிதாக விண்ணப்பங்கள் பெறப்படவுள்ள நிலையில், அவற்றை அரசு அலுவலா்கள் கூா்ந்து பரிசீலிக்க வேண்டும். தகுதியுள்ள மாணவா்கள் விடுபடாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அருணா.
கூட்டத்தில், மாவட்ட சமூக நலஅலுவலா் மே. சியாமளா உள்ளிட்ட அலுவலா்களும் கலந்து கொண்டனா்.