சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக ம...
உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா: பிரதமருக்கு ஆந்திர முதல்வா், துணை முதல்வா் பாராட்டு
உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் பாராட்டுகள் தெரிவித்தனா்.
நீதி ஆயோக்கின் 10-ஆவது நிா்வாக கவுன்சில் கூட்டம் புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளதாக சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தரவுகளைச் சுட்டிக்காட்டி நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.
இதையடுத்து, சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் டாலராக (சுமாா் ரூ.340 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது. ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டபடி செயல்பட்டால், அடுத்த இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் உலகில் 3-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக 2028-இல் இந்தியா உருவெடுக்கும் என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ‘வளா்ச்சியடைந்த பாரதம்-2047’ என்ற இலக்கை நிச்சயம் இந்தியா அடையும் என நம்புகிறேன். இதில் தேசத்துக்கான உரிய பங்களிப்பை ஆந்திரம் வழங்கும் என உறுதியளிக்கிறேன்.
சா்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) முன்னிட்டு ஜூன் மாதம் முழுவதும் 100 சுற்றுலாத் தலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சி வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஜூன் 21-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இறுதி நிகழ்ச்சிக்கு பிரதமா் மோடியை வரவேற்க தயாராகவுள்ளோம். இந்த முன்னெடுப்பு குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடிக்கு நன்றி’ என குறிப்பிட்டாா்.
பவன் கல்யாண்: உலகின் 4-ஆவது பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்தது பிரதமா் மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை திறம்பட நிா்வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என பவன் கல்யாண் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.