பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி
பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல; பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 27) தெரிவித்தார்.
பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நகர்புற வளர்ச்சித் திட்டக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,
''தனது அண்டை வீட்டாரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என நாம் விரும்புவோம். ஆனால் எங்கள் பலத்திற்கு சவால் விட்டால், இந்தியாவிடம் உள்ள நாயகர்களை அவர்கள் காண நேரிடும்.
இது மறைமுகமானப் போர் எனக் கூற முடியாது. ஆபரேஷன் சிந்தூரின்போது கொல்லப்பட்டவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்துள்ளது பாகிஸ்தான். அவர்களின் சவப்பெட்டியில் பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டிருந்தது. ராணுவ வீரர்கள் இறந்தவர்களின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்துகின்றனர். பயங்கரவாதிகளின் நடவடிக்கை மறைமுகமான போர் அல்ல என்பதை இது காட்டுகிறது.
பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து பாகிஸ்தான் செய்வது மறைமுகப் போர் அல்ல; நேரடியானப் போர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது அவர்களின் போர் வியூகம்.
அவர்கள் (பாகிஸ்தான்) போரில் ஈடுபாட்டுடன் இருந்தால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். வலுவான உடலாக இருந்தாலும் ஒரு சிறிய முள் நிலையான வலியை ஏற்படுத்தும். பயங்கரவாதம் எனும் முள்ளை நாம் அகற்றுவோம்.
பிரிவினையின்போது பாரத நாடு இரு பிரிவுகளாக்கப்பட்டது. பிரிவினையின் முதல் நாள் இரவு காஷ்மீரில் முதல் பயங்கரவாதத் தாக்குதல் முஜாஹிதீன்களால் நடத்தப்பட்டது. அவர்களின் உதவியால், இந்திய நாட்டின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக்கொண்டது.
இந்த பயங்கரவாத மரபு 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலும் இதன் ஒரு பதியாகவே உள்ளது. இந்த உள்ளூர் ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய ராணுவத்துன் பலத்தை பார்த்து வருகிறது. இந்தியாவுடனான நேரடிப் போரில் ஒருபோதும் பாகிஸ்தானால் வெற்றி பெற முடியாது என்பதை நமது ராணுவத்தினர் நிரூபித்துள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | இறக்குமதியாகும் விநாயகர் சிலைகள்... சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்!
இதையும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!