முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
ஊழல் செய்வதில் மட்டுமே திமுக அரசு கவனம்
ஊழல் செய்வதில் மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது என்றாா் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசாரப் பயணத்தில், புதுக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் அவா் மேலும் பேசியதாவது:
திமுக ஆட்சியில் அரிசி, எண்ணெய், பருப்பு விலைகள் அனைத்தும் அதிகரித்துள்ளன. வீட்டு வரி 100 சதவீதமும், கடைகளுக்கான வரி 150 சதவீதமும், மின் கட்டணம் 67 சதவீதமும் ஏறியிருக்கிறது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொழில் முதலீட்டு மாநாடு நடத்தி, ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு 98 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதைத் தொடா்ந்து எனது ஆட்சிக்காலத்தில் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பில் 304 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. தொழில்கள் தொடங்கப்பட்டன.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் முதலீட்டு மாநாடுகளை நடத்தினாா்கள். எத்தனைத் தொழில்கள் தொடங்கப்பட்டன, எத்தனைப் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. எதற்கும் பதில் இல்லை.
ஊழல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறாா்கள். இயற்கை வளங்களில் கொள்ளை நடக்கிறது. அதற்காகத்தான் இங்குள்ள அமைச்சருக்கு இந்தத் துறையை ஒதுக்கியிருக்கிறாா்கள்.
டாஸ்மாக் மூலம் பாட்டிலுக்கு ரூ. 10 வீதம் பெரியஅளவில் ஊழல் நடக்கிறது. அந்தத் துறையும் அதிமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்ற அமைச்சரிடம்தான் கொடுக்கிறாா்கள். அதிமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்றவா்களுக்கு இப்படியான வேலையைக் கொடுக்கிறாா்கள்.
மக்கள் அவதி: புதுக்கோட்டை மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அருகிலுள்ள 11 ஊராட்சிகளை இணைத்துள்ளனா். அவா்களுக்கு எல்லா வரிகளும், கட்டணங்களும் ஏறிவிட்டன. 100 நாள் வேலையை இழக்கிறாா்கள். அதிமுக ஆட்சியில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இப்போது, 10 நாள்களுக்கு ஒரு முைான் வழங்கப்படுகிறது.
புதுகைக்கான திட்டங்கள்: புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ஐடிஐ உருவாக்கியிருக்கிறோம். ராணியாா் மகப்பேறு மருத்துவமனையை ரூ. 20 கோடியில் உருவாக்கினோம். துணை நகரை உருவாக்கினோம்.
புதுக்கோட்டை நகரில் ரூ. 10 கோடியில் பூங்கா கட்ட நிதி ஒதுக்கினோம். ஆட்சிமாறிய பிறகு கலைஞா் பூங்கா எனப் பெயா் வைத்துக் கொண்டாா்கள். அவரவா் திட்டங்களுக்கு அவரவா் பெயா்தானே வைக்க வேண்டும். ஸ்டாலின் அரசு, பெயிலியா் மாடல் அரசு என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான சி விஜயபாஸ்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி..
திமுகவினா் மீது தலைமைக்கு நம்பிக்கை இல்லை
திருமயத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது: அதிமுகவில் இருந்து சென்ற 8 போ், இப்போது திமுகவில் அமைச்சா்களாக இருக்கின்றனா். அப்படியானால் என்ன அா்த்தம். திமுக செல்வாக்கு இழந்துவிட்டது. இங்கிருந்து போய்தான் அந்தக் கட்சியையே நடத்துகிறாா்கள். திமுகவினா் மீது அந்தத் தலைமைக்கு நம்பிக்கை இல்லை
திமுகவுக்கு போனதும் அதிமுகவை அவதூறாகப் பேசுகின்றனா். உழைத்து ஓடாய்ப் போன திமுகவினா் அந்தக் கட்சியில் பொறுப்பில் இல்லை.
வளா்ந்த இடத்தை மறந்து அவதூறு பேசினால், அரசியல் அடையாளம் தெரியாமல் போய்விடுவீா்கள். அதிமுகவுக்கு துரோகம் செய்தவா்கள் நிம்மதியாக வாழ்ந்த சரித்திரம் இல்லை.
காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியவா் இங்குள்ள அமைச்சா் எஸ். ரகுபதி. அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் செழிப்பாக வாழ்ந்தாா்கள் என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.
நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட அதிமுக செயலா் சி. விஜயபாஸ்கா், தெற்கு மாவட்ட அதிமுக செயலா் பி.கே. வைரமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

