`எடப்பாடி டெல்லியில் யாரைச் சந்திக்கிறார் என்ற செய்தி வந்துவிட்டது’ - சட்டமன்றத்தில் ஸ்டாலின்
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒருபகுதியாக, சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்றது. இதில், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால்தான் கல்விக்கு நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுவது தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பாதியில் நிறுத்தப்பட்ட நேரலை
இதன் மீது, உரையாற்றிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், ``பேரறிஞர் அண்ணா இருமொழிக் கொள்கையை இந்த அவையில் எடுத்துவைத்திருக்கிறார். அவரைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருமொழிக் கொள்கையைச் செயலாக்கம் செய்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார். மொழிக்காகத் தஞ்சையில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கிக்கொடுத்தவர் எம்.ஜி.ஆர்" என்று உரையாற்றிக்கொண்டிருந்தபோது நேரலை ரத்து செய்யப்பட்டது.
இவ்வாறு நடப்பது இது முதல்முறையல்ல, தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் அரசின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கும்போது நேரலை நிறுத்தப்பட்டிருக்கிறது.
டெல்லி சென்றிருக்கும் எதிர்க்கட்சி தலைவர்...
பின்னர், உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ``பா.ஜ.க-வைத் தவிர பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளும் இருமொழிக் கொள்கை குறித்து தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தில் எப்போதும் உறுதியாக இருப்போம் என்று எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உறுதியளித்திருக்கிறார்.
இன்று காலை நம் எதிர்க்கட்சித் தலைவர் டெல்லிக்குச் சென்றிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. யாரைச் சந்திக்கப் போகிறார் என்ற செய்தியும் வந்திருக்கிறது. அப்படிச் சந்திக்கும் நேரத்தில், இதுகுறித்து வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

இரண்டாயிரம் கோடி அல்ல பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம். இது பணப் பிரச்னை அல்ல நம் இனப் பிரச்னை. நிதி தரவில்லை என்பதற்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமை அல்ல நாங்கள்.
இதே அவையில் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, ஜனவரி 23, 1968 அன்று இருமொழிக் கொள்கைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது தமிழ்நாட்டுக்கு அண்ணா அளித்த மாபெரும் கொடை. இது கொள்கை மட்டுமல்ல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது சட்டம்.
வெறும் மொழித் திணிப்பு அல்ல
இந்த இரு மொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டை அரை நூற்றாண்டு காலமாக வளர்த்துவந்திருக்கிறது. இரு மொழியே போதும், எந்த மொழிக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நாம் நிற்பதில்லை.
அதேநேரத்தில் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருப்பினும் அதை அனுமதிப்பதில்லை என்று இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம். இந்தித் திணிப்பு என்பது வெறும் மொழித் திணிப்பு அல்ல. அது பண்பாட்டு அழிபாக்க அமையும் என்பதால்தான் இதில் உறுதியாக இருக்கிறோம்.

மொழித் திணிப்பின் மூலமாக மாநிலங்களை, மாநில மொழிகளை, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
மாநிலங்களைத் தங்களின் கொத்தடிமைப் பகுதிகளாக நினைப்பதால்தான் இதுபோன்ற மொழித் திணிப்புகளும், நிதி அநீதிகளும் செய்கிறார்கள். எனவே இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைக் காக்கவும், மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச் சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
மாநில சுயாட்சியை உறுதிசெய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும்" என்று கூறினார்.