டி20 போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள்; மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!
சுஷாந்த் சிங் செயலாளர் திஷா தற்கொலையில் ஆதித்ய தாக்கரேவுக்குத் தொடர்பு? ஷிண்டே அணி சொல்வது என்ன?
தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்திடம் செயலாளராக இருந்த திஷா சாலியன், மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. இது நடந்த அடுத்த 6 நாட்கள் கழித்து பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் ரஜபுத் தற்கொலை செய்து கொண்டார்.
திஷா சாலியன் தற்கொலையில் சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயிக்குத் தொடர்பு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயன் ரானே தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

திஷா சாலியன் தந்தை சதீஷ் சாலியனும் தனது மகள் தற்கொலையில் ஆதித்ய தாக்கரேயிக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவரைக் கைது செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு இவ்வழக்கைப் புதிதாக விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்து இருக்கிறார்.
சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் இக்கொலை தொடர்பாக விசாரிக்கச் சிறப்புப் படை ஒன்றை மாநில அரசு அமைத்திருக்கிறது.
இதையடுத்து ஆதித்ய தாக்கரே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை எழுந்தது.
சட்டமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் இது தொடர்பாகப் பேசுகையில், ''தனஞ்சே முண்டே தன்மீதான குற்றச்சாட்டுக்குப் பொறுப்பு ஏற்றுத் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதே போன்று திஷா சாலியன் தற்கொலையில் ஆதித்ய தாக்கரே பெயர் அடிபடுவதால் அவர் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்வாரா? ஆதித்ய தாக்கரே மீதான புகார் குறித்து அரசு விசாரிக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. உடனே சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
அவை கூடியபோது இதற்குப் பதிலளித்த அமைச்சர் சம்சுராஜே தேசாய், ''ஆதித்ய தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்கிறாரா இல்லையா என்பதை அவரும், அவரது கட்சியும் முடிவு செய்யட்டும்.
ஆனால் தவறு செய்தவர்களை அரசு விட்டு வைக்காது. திஷா சாலியன் தற்கொலை தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அந்த அறிக்கை சிறப்பு விசாரணைக் குழுவிடம் கொடுக்கப்படும்'' என்றார்.
பா.ஜ.க உறுப்பினர் ராம் கதம் இது குறித்துப் பேசுகையில், ''உத்தவ் தாக்கரே ஆட்சிக்காலத்தில் சுஷாந்த் சிங் ரஜபுத் தற்கொலை தொடர்பாக ஆதாரங்களை அழித்துவிட்டனர்.
எனவே திஷா சாலியன் கொலையை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழு சுஷாந்த் சிங் ரஜபுத் தற்கொலை தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும். சுஷாந்த் சிங் தற்கொலை செய்து 68 நாட்கள் கழித்து இவ்வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாகப் பீகார் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பீகார் போலீஸார் சுஷாந்த் சிங் வீட்டில் சோதனை நடத்த அனுமதிக்கப்படவில்லை. ஆதாரங்களை அழித்துவிட்டு வீட்டை அதன் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டனர்'' என்றார்.
உடனே பேசிய உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த வருண் சர்தேசாய், பா.ஜ.க-சிவசேனா கூட்டணி சி.பி.ஐ. விசாரணையைக் குறைத்து மதிப்பிடுகிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.

சட்டமேலவையிலும் இப்பிரச்னை எதிரொலித்தது. சட்டமேலவையிலும் ஷிண்டே கட்சியைச் சேர்ந்த பாவ்னா காவ்லி இப்பிரச்னையை எழுப்பிப் பேசினார்.
திஷா சாலியன் கொலையில் ஆதித்ய தாக்கரேயிடம் ஏன் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவில்லை. இவ்வழக்கு விசாரணை மிகவும் மெதுவாக நடப்பதாகத் தெரிகிறது.
அரசு இவ்விவகாரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார். இதனால் சட்டமேலவையிலும் சலசலப்பு ஏற்பட்டது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...