`சிதையும் மக்களாட்சி; உள்ளாட்சியில் அடிபட்டுக் கிடக்கும் 70% நீதி' - திமுக அரசுக்கெதிராக போராட்டம்!
28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தையும், மாநில அரசையும் கண்டித்து தன்னாட்சி, அறப்போர் இயக்கம், மக்களின் குரல், IGG, தோழன் ஆகிய இயக்கங்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, ராஜரத்தினம் அரங்கத்திற்கு அருகில் உண்ணாவிரதம் மற்றும் தொடர் கண்டன உரைப் போராட்டத்தை நடத்தின.
`ஊராட்சி தேர்தல் எங்கள் உரிமை, உடனே நடத்துவது உங்கள் கடமை' என்று கோஷங்கள் எழுப்பி போராட்டத்தை தொடங்கினர். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த பேராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமனிடம் பேசினோம். "தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்றால் முழுக்க முழுக்க அரசியல் காரணம் மட்டும் தான். அரசியல் சாசனப்படி ஜனவரி 2025-க்குள் 28 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கு எந்த காரணமும் சொல்லிவிட முடியாது. உதாரணமாக, 2026ல் சட்டசபை தேர்தல் நடத்த தேவையில்லை ஒரு வருடம் தள்ளிப் போடலாம் என்று மத்திய அரசாங்கம் சொல்கிறதென்றால், மாநில அரசு என்ன சொய்யும்? திமுக அரசு என்ன மாதிரியான போராட்டங்களை நீங்கள் முன்னெடுப்பீர்கள்? அப்போது, அதை எந்தளவுக்கு அநியாயம் என்று நீங்கள் பேசுகிறீர்களோ இன்றைக்கு அதே அநியாயத்தை நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.
உள்ளாட்சி தலைவர்கள் இல்லாமல் மக்கள் படும் பிரச்னைகளை தினம் தினம் பார்க்க முடிகிறது. குடிநீர் வரவில்லை என்றாலும் பல கி.மீ பயணம் செய்து பி.டி.ஓ அலவலகம் சென்று தான் முறையிட வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில் அதிகாரிகள் மட்டும் தான் ஆட்சி செய்வார்கள் என்றால், மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் நம்முடைய பிரதிநிதகள் தேவையே இல்லையே. இன்று நம் அடிப்படையே மக்களாட்சி தான். அந்த மக்களாட்சியையே சிதைக்கும் அளவுக்கு இன்று திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு ஒரே காரணம், ஊராட்சிகளில் யாராவது ஒருவருக்கு பஞ்சாயத்து தலைவர் பதவி ஒதுக்கினால் அடுத்த சட்டசபைத் தேர்தலில் திமுக-வுக்கு மற்றவர்தள் வேலை செய்ய மாட்டார்கள் என்றுதான். அதனால் எல்லோரையும் வேலை செய்ய வைத்துவிட்டு அதற்கு பிறகு பஞ்சாயத்து தேர்தலை பார்த்துக் கொள்ளலாம் என்று வெறும் கட்சிரீதியாக, அவர்கள் கட்சிக்கு எது பயனுள்ளதாக இருக்கும் என்று தான் பார்க்கிறார்களே ஒழிய, மக்களுடைய உரிமைகளை பார்ப்பதில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஊராட்சி தேர்தல் நடத்தப்படாததால், ஒரு பஞ்சாயத்து என்றால் குடி தண்ணீர் பராமரிப்பதில் இருந்து குப்பைகளை அகற்றுவது வரை அதுதான் செய்ய வேண்டும். இன்றைக்கு பல இடங்களில் குப்பைகள் குவிந்து வருகிறது. எந்த பிரச்னை என்றாலும் மக்களால் எளிதில் பஞ்சாயத்து தலைவர்களை அணுக முடியும். மக்களால் பொதுப்பணிதுறையிடம் சென்று கொண்டிருக்க முடியாது. பஞ்சாயத்து தலைவர் என்பவர்தான் எளிய மக்களுக்கு முக்கியமானவர்" என்றார்.
முதலில் கண்டன உரையாற்றிய கல்பனா, ``முன்பு கலைஞர் கருணாநிதி 1996ல் உள்ளாட்சி தேர்தலை நடத்தினார். பின்பு 2001ல் சரியாக அடுத்த உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்பட்டது. அடுத்ததாக அமைந்த ஜெயலலிதா தலைமயிலான அரசிடம் நாங்கள் உரிமையாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டோம் அவரும் அதை சட்டமாக்கினார். மேலும் கலைஞர், உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டும் என்று கூறி தனியே ஓர் ஆணையத்தையும் அமைத்தார். ஆனால் அதற்கு அடுத்தடுத்து வந்த கட்சிகள் அந்த கான்செப்டையே புரிந்துகொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அதிகாரம் அவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கம். ஊராட்சி தேர்தல்கள் படிப்படியாக நடத்தப்படும், அதன் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும், இது தெடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தலையிட மாட்டோம் என்று உங்கள் தந்தை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா?" என்று கூறி தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்தார்
அடுத்ததாக பேசிய பேராசிரியர் பழனிதுரை, ``இந்த சமூகம் ஜனநாயகத்துக்கான உளவியலை உருவாக்கிக் கொள்ளவில்லை. இந்த நாட்டின் கடைக்கோடி பிரஜைக்கும் அவனுடைய தேவையை உணர்ந்து கொள்ளும் போது தான் இது காந்தி தேசமாக இருக்கும். அரசியல் கட்சிகள் முதலில் குடிமக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால் இங்கு ஜனநாயகம் என்பது அவர்கள் வாக்குகளை வாங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். மக்கள் வாக்குகளை விற்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலைப்பாடு பெரிய துரோகம். இதற்கான பொறுப்பு நமக்கும் உண்டு என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எப்படி அன்று சுதந்திரத்திற்காக போராடினார்களோ அதே போல தான் நாம் இன்று ஜனநாயகத்துக்காக போராடுகிறோம். கடைகோடி மனிதனின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான இடம் உள்ளாட்சியில் தான் இருக்கிறது." என்றார்.

தெடர்ந்து பேசிய அவர், "உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதால் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தலித்துகளுக்கு அவர்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்தால் சுமார் 70 சதவிகிதம். அப்படி என்றால் நாட்டில் 70 சதவிகிதம் நீதி அடிபட்டு கிடக்கிறது" என்று கூறினார்.
இந்த உண்ணாவிரம் மற்றும் தெடர் கண்டன உரை போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.