வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!
என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?
நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை லிட்டராவது அருந்திவிடுவார்கள்.
சரி.. அடுத்து அதாவது தண்ணீருக்கு அடுத்து மக்கள் அதிகம் குடிக்கும் பானமாக இருப்பது எது தெரியுமா? பலரும் இன்று வரை விட முடியாமல் தவிக்கும் பானம்தான் அது. தேநீர்.
இந்த தேநீர் கண்டுபிடிக்கப்பட்டது என்னவோ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், இன்று வரை அதற்கு கோடிக்கணக்கான அடிமைகள் இருக்கிறார்கள். எதேச்சையாக ஒரு விவசாயி, குடிக்கும் தண்ணீரில் தேயிலை இலைகளைப் போட்டு கொதிக்க வைத்தபோது அதிலிருந்து வந்த மணம்தான் தேநீர் கண்டுபிடிக்க உதவியதாகவும், இல்லை இல்லை, சீனாவின் பேரரசர் ஷென்னோங் தான், தேநீரை கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் இவர்தான் தேநீரைக் கண்டுபிடித்தவர் என்று உறுதிபடக் கூறிவிட்டால் அவருக்கு ஆலயம் கட்டக் காத்திருப்பவர்கள் ஏராளம்.
காரணம், உலகளவில் தண்ணீருக்கு அடுத்த படியாக அதாவது உலக மக்களால் அதிகம் குடிக்கப்படும் பானமாக தேநீர் உள்ளது என்பது இதனை உறுதி செய்கிறது.
முதலில், தேநீர் என்பதை உடல்நலக் குறைவின்போது கொடுக்கும் மருந்தாகவே மக்கள் பயன்படுத்தினர். பிறகு அதன் ருசி பிடித்துப்போனதால், தேநீர் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
பொதுவாக பழச்சாறு, குளிர்பானங்கள் என்றால் அளவில் அதிகமாக மக்கள் பருகும் நிலையில், ஒரு டம்ளரில் சிறிய அளவில் குடிக்கும் தேநீர், மற்ற பானங்களை எல்லாம் முந்தியிருப்பதே மகிழ்ச்சியை அளிக்கிறது.