சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை
புதுச்சேரியில் தனியார் `பைக் டாக்சி’ சேவை - வரவேற்கும் மக்கள்; எதிர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு அயல் நாடுகளில் இருந்தும், அயல் மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். புதுச்சேரி அரசும் மாநில வருவாய்க்காக சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், வார இறுதியில் மட்டுமே வந்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது வார நாட்களிலும் வர ஆரம்பித்திருக்கின்றனர்.
ஆனாலும் புதுச்சேரியில் இதுவரை எந்த டாக்சி சேவை நிறுவனங்களும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் களமிறங்கியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள், அதற்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் கிழித்து எறிந்தனர். அரசியல் தலையீட்டின் காரணமாக போக்குவரத்துத் துறையும் அதை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதனால் அது போன்ற நிறுவனங்கள் புதுச்சேரியில் காலூன்ற முடியவில்லை. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் வாகன நிறுவனம் ஒன்று, புதுச்சேரியில் தன்னுடய சேவையை துவக்கியது. புதுச்சேரி நகரின் முக்கிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த வாகனங்களை, வாடிக்கையாளர்கள் செல்போன் ஆப் மூலம் இயக்கிக் கொள்ளலாம். ரூ.50 முதல் ரூ.100 வரை ரீசார்ஜ் செய்தால், தூரத்திற்கு தகுந்தாற்போல கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும். இந்த சேவை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சேவைக்கு, புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து அந்த வாகனங்கள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாலும், போக்குவரத்துத் துறையின் கெடுபிடிகளாலும் அந்த சேவையும் முடங்கியது.
இந்த சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு இந்த தனியார் `பைக் டாக்சி’ அறிமுகமானது. அதில் சவாரி செய்வதுடன், இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் கேப்டனாகவும் (ஓட்டுநர்) பணியாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினத்தில் இருந்தே பொதுமக்கள் அதில் பயணிக்க ஆரம்பித்தனர்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஒருவர் அண்ணா சாலைக்கு செல்ல வேண்டும் என, ஆட்டோ கேட்டால், அவர்கள் சொல்லும் கட்டணம் மிக அதிகம் என கலங்குவார்கள் பயணிகள். ஆனால் அதே இடத்திற்கு பைக் டக்ஸியில் செல்லும் ஒருவருக்கு, ரூ.20+ மட்டுமே செலவாகிறது. அதனால் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல வேலையில்லாத உள்ளூர் பட்டதாரி இளைஞர்கள், கேப்டனாகவும் பணியாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் வழக்கம்போல, பைக் டாக்ஸி சவாரியை தடை செய்ய வேண்டும் என்று இதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.
சில நாட்களுக்கு முன்பு இந்த பைக் சவாரியை தடை செய்ய வேண்டும் என்று, ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் பந்த் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ``இ-பைக்குகள் மற்றும் பைக் சவாரிகள் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. அதனால் அவற்றை தடை செய்ய வேண்டும். நாங்கள் சாலை வரி செலுத்துகிறோம். பர்மிட் எடுக்கிறோம். ஆனால் இந்த சேவை நிறுவனங்கள் என்ன செய்கின்றன?” என்று ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பைக் டாக்ஸி கேப்டன்களுக்கும் இடையே தினமும் வாக்குவாதம் நடைபெற்று வருவது வாடிக்கையாகி விட்டது. இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, ``ரேபிடோ பைக் சவாரியில் ஒருவர் மட்டும்தான் போக முடியும்.

நான்கைந்து பேர் அதில் செல்ல முடியாது. அப்படி தனியாக செல்பவர்தான் ரேபிடோவை தேர்ந்தெடுக்கிறார். ரூ.20-ல் ரேபிடோவில் சவாரியை முடிக்கும் அவர், ஆட்டோவில் சென்றால் குறைந்தபட்சம் ரூ.200 ஆவது கொடுக்க வேண்டும். அதுவும் அவருக்கு பேரம் பேசும் திறமையிருந்தால்தான். இல்லையென்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் குறிப்பிடும் தொகையைத்தான் கொடுக்க வேண்டும்.
ரூ.20-ல் முடியும் ஒரு பயணத்திற்கு, ரூ.200 செலவு செய்ய யார்தான் முன் வருவார்கள்? ஆட்டோவை பயன்படுத்த நினைப்பவர்கள் சாதாரண மக்கள். அவ்வளவு செலவு செய்ய எப்படி முடியும்?
ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் சட்டத்தையும், அரசின் உத்தரவுகளையும் அப்படியே கடைப்பிடிக்கிறார்களா ? அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்த வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது போக்குவரத்துத் துறை. அத்துடன் குறைந்தபட்ட கட்டணத்தையும் குறிப்பிட்டிருந்தது போக்குவரத்துத் துறை. ஆட்டோ ஓட்டுநர்கள் அதை மட்டும் கடைப்பிடிக்க மறுப்பது ஏன் ?
அதேபோல பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, புதுச்சேரியில் டீசல் மட்டுமல்ல வரிகளும் குறைவுதான். ஆனால் இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது போக்குவரத்துத் துறைக்கு கண்டிப்பாக தெரியாமல் இருக்காது. ஆனால் இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத் துறை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டும் அஞ்சுவது ஏன் என்று தெரியவில்லை.
இந்தியா முழுவதும் அனுமதிக்கப்படும் இப்படியான சவாரி நிறுவனங்களுக்கு, புதுச்சேரியில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் ? சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை, பைக் டாக்ஸியில் பயன்படுத்துகிறார்கள் என்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.

அப்படி என்றால் புதுச்சேரியின் வீதிகள் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து, வாடகைக்கு விடப்படும் ஆயிரக்கணக்கான வண்டிகள் எந்த அடிப்படையில் வாங்கப்படுகிறது ? அவையும் சொந்தப் பயன்பாட்டிற்குதானே வாங்குகிறார்கள் ? அதை மட்டும் எப்படி அனுமதிக்கிறார்கள் ? அவற்றிற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியதைப் போல, இந்த சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரலாமே தவிர முற்றிலும் தடை செய்வது எப்படி நியாயமாக இருக்கும் ?
இதேபோல உணவு டெலிவரி நிறுவனங்களின் டெலிவரி பார்ட்னர்களுக்கும் தடை விதிப்பார்களா? ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் எங்களுக்கு அப்படி எதுவும் இல்லை. அரசுதான் எங்கள் பக்கம் நிற்க வேண்டும். அதற்காகத்தான் அதை தேர்வு செய்கிறோம்” என்கிறார்கள் அதனை பயன்படுத்தும் சிலர்.
புதுச்சேரி அரசும், போக்குவரத்துத் துறையும் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இல்லை எனில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பைக் டாக்ஸி கேப்டன்களுக்கும் சாலையில் வாக்குவாதமும் மோதலும் தொடர தான் செய்யும்.!