அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?
"திமுக கூட்டணி, சூட்கேஸ் கூட்டணி; கொள்கைக் கூட்டணி கிடையாது" - சொல்கிறார் செல்லூர் ராஜூ
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் புதூர் கிராமத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, "100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்திக் கொடுப்போம், ஒரு நாள் ஊதியமாக 350 ரூபாய் தருவோம் என தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னது. இப்போது மத்திய அரசு இரண்டு மாதமாக பணம் வழங்கவில்லை என பழி போடுகிறார்கள். கார் ரேஸ், கடலில் பேனா, ஜல்லிக்கட்டு அரங்கம் என பணத்தை வீண் செலவு செய்பவர்கள், அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாம் அல்லவா?

இப்போது 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம் நடத்த தொடங்கியுள்ளது. அதில் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் மக்களை கட்டாயப்படுத்தி பங்கேற்கச் செய்கிறார்கள்.
அதிமுக ஆட்சி காலத்தில் நூறு கோடி, இருநூறு கோடி நிதியில் மக்களுக்கு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம், அதிமுக ஆட்சியில் நான்காண்டுகளில் மட்டும் மதுரைக்கு 8000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆனால், இப்போது ஒரு அமைச்சர், நகரில் ஒரு சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையைக்கூட பகுதி பகுதியாக செய்கிறார்.
`எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுங்கள்' என முதலமைச்சர் சொல்வது, ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாக உள்ளது. முதலமைச்சர் ஏன் எங்களைப்பற்றி பேசுகிறார்? திமுக-வினர் அதிமுக மீது கரிசனம் காட்டுவது ஏமாற்று வேலை.
திமுக கூட்டணியில் உள்ளவர்கள் திமுக குறித்துத் தவறாகப் பேசினால், உடனே சூட்கேஸை எடுத்துக்கொண்டு கூட்டணிக்கட்சியினரிடம் செல்கிறார்கள். இது கொள்கைக் கூட்டணி அல்ல, சூட்கேஸ் கூட்டணி போலதான் உள்ளது.

நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் மக்களோடு மக்களாக இருக்கின்றோம் என்பது தம்பி விஜய்க்குத் தெரியும். அதனால் தான் அவர் எங்களை விமர்சிக்கவில்லை. திமுக எப்படி வேஷம் போடுகிறது என்று நாங்கள் சொல்வதைத்தான் அவரும் சொல்லியுள்ளார். எதிரியாக இருந்தாலும் பேசுவதுதானே தமிழ்நாட்டின் கலாசாரம். நான்கூட வரும் வழியில் திமுக-வினரைச் சந்தித்து பேசினேன். நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்காரர் மதுரையில் பிறந்தவர்தானே?அவரைச் சந்திப்பதில் என்ன தவறு? செங்கோட்டையன் எதார்த்தமாகவும், தற்செயலாகவும் சந்தித்து இருப்பார். அதிமுக தலைமையில்தான் 2026-ல் கூட்டணி அமையும், இதனை எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்" என்றார்.