ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!
புதுதில்லி: ஜாகுவார் லேண்ட் ரோவர் குழுமத்தின் அங்கமான ஆர்டிஃபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 80% பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு கையகப்படுத்த போவதாக டாடா ஆட்டோகாம்ப் இன்று தெரிவித்தது.
இந்த பரிவர்த்தனை மூலம் 296 மில்லியன் பவுண்டுகள் வருவாய் கொண்ட ஆர்டிஃபெக்ஸ், டாடா ஆட்டோகாம்ப் குழுமத்தில் இணையும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த கையகப்படுத்தல் மூலம், டாடா ஆட்டோகாம்ப் இந்தியாவின் மிகப்பெரிய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களில் ஒருவராக தனது நிலையை பலப்படுத்தும் வேளையில், ஐரோப்பாவின் வாகனத் துறையிலும் அதன் இருப்பை வலுப்படுத்தும்.
இந்த கையகப்படுத்தல் மூலம், எங்கள் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், வாகன உட்புற அமைப்புகளில் எங்கள் நிபுணத்துவத்தை மேலும் வலுப்படுத்த உதவும் என்றார் டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் துணைத் தலைவர் அரவிந்த் கோயல்.
ஆர்டிஃபெக்ஸின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி திறன் எங்கள் தொழில்நுட்ப தலைமையை மேம்படுத்தும் அதே வேளையில், பிரீமியம் வாகன பிரிவில் எங்கள் இருப்பை வலுப்படுத்தும் என்றார் டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மனோஜ்.
இதையும் படிக்க: நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!