ரூ.1.72 லட்சத்துக்கு சிக்கந்தர் பட டிக்கெட்! அதிர்ச்சி அளிக்கும் சல்மான் கான் ரசிகர்!
பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரசிகர் ஒருவர் சிக்கந்தர் படத்துக்கான டிக்கெட்டுகளை ரூ.1.72 லட்சத்துக்கு வாங்கி அதனை இலவசமாக விநியோகித்துள்ளார்.
இதற்கான நிதித் தொகையை சல்மான் கான் கொடுத்தாரா? என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்பம் இன்று (மார்ச் 30) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பிரீதம், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகியது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ரமலான் விடுமுறையை இலக்காக வைத்து இன்று வெளியான சிக்கந்தர் படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இதனிடையே மும்பையில் சல்மான் கான் ரசிகர் ஒருவர், சிக்கந்தர் படத்துக்கான முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை (ரூ. 1.72 லட்சம் மதிப்பு) வாங்கி அதனை மக்களுக்குக் கொடுத்து படத்தைப் பார்க்க ஊக்குவித்துள்ளார். இவர், அந்தத்தொகைக்கு 817 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அதனை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் விடியோ இணையத்தில் வெளியாகி பலரின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
பின்னர், டிக்கெட்டுகளை விநியோகம் செய்த ரசிகர், ராஜஸ்தான் மாநிலம் ஜும்ரு பகுதியைச் சேர்ந்த குல்தீப் கஸ்வான் எனத் தெரியவந்துள்ளது.
இந்தத் தொகையை சல்மான் கான் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டு டிக்கெட்டுகளை இலவசமாக விநியோகம் செய்ய ஊக்குவிக்கப்பட்டதா? என சமூக வலைதளங்களில் பலர் கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.
பின்னர் இது குறித்துப் பேசிய குல்தீப் கஸ்வான், தான் தீவிரமான சல்மான் கான் ரசிகன் என்றும், தனது சொந்த பணத்தில் டிக்கெட்டுகளை விலைக்கு வாங்கி இலவசமாக விநியோகிப்பதாகவும் குறிப்பிட்டார்.
சல்மான் கான் ரசிகர்கள் பலர் இதனை நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துவந்தாலும், சிக்கந்தர் படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருவதால், ரசிகர்கள் இவ்வாறு செய்வதாகப் பலர் விமர்சித்துள்ளனர்.
இதையும் படிக்க | திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த விக்ரம், துஷாரா விஜயன்