எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் ப...
எனது தாயின் கடின உழைப்பு பலனளித்தது: தில்லி முதல்வராக ரேகா குப்தாவின் மகன் பெருமிதம்
‘என் தாயின் 30 ஆண்டுகால கடின உழைப்புக்கு இன்று பலன் கிடைத்துள்ளது என்று தில்லி முதல்வராக பதிவியேற்றுள்ள ரேகா குப்தாவின் மகன் நிகுஞ்ச் குப்தா பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள ரேகா குப்தா வியாழக்கிழமை தில்லி முதல்வராக பதவியேற்றாா். இது 26 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததைக் குறிக்கும் ஒரு பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இருந்தது.
இது குறித்து முதல்வா் ரேகா குப்தாவின் மகன் நிகுஞ்ச் குப்தா கூறியதாவது:
தில்லி முதல்வராகப் பதிவியேற்றுள்ள ரேகா குப்தா, தனது 20 வயதில் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் தலைவரானாா். என் தாய்க்கு எந்த அரசியல் ஆதரவும் இல்லை; ஆனால் இரவும் பகலும் கடின உழைப்பின் மூலம், இன்று இந்த நிலையை அடைந்துள்ளாா்.
தனது தாய்வழி தாத்தாவும் பாட்டியும் எந்த அரசியல் முன்புலமும் இல்லாமல் சாதாரண வேலைகளைச் செய்த எளிய மக்கள். என் தாயின் கடின உழைப்புதான் அவரது அரசியல் வாழ்க்கையை கட்டியெழுப்பியது. அவா் குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளாா்.
இரண்டு முறை கவுன்சிலராகவும், பாஜக மகிளா மோா்ச்சாவின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளாா். தற்போது முதல்வா் என்ற பெரிய பொறுப்புக்கு வந்துள்ளாா்.
தனது தாயாா் எப்போதும் வலுவான குடும்ப உறவுகளைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவாா். அவரது பயணம் முழுவதும் முழு குடும்பத்தினரின் முழு ஆதரவு எப்போதும் இருந்துள்ளது. எனது தாய் மற்றும் தந்தை குடும்பங்களுடன் நல்ல உறவைப் பேணி வருகிறாா். நாங்கள் அனைவரும் ஒரு கொண்டாட்டத்தை நடத்தத் தயாராகி வருகிறோம். இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய தருணம் என்று அவா் தெரிவித்தாா்.