புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?
ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை
ராமேசுவரம் மீனவா்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் தேதி அந்தோணி ஆரோன், பூண்டிராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளில் 17 மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள், கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இரண்டு விசைப் படகுகளுடன் 17 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து, தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.
இதையடுத்து, மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு இந்த மாதம் 7-ஆம் தேதி மன்னாா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், 17 மீனவா்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, 13 மீனவா்கள் தலா ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டனா். படகு ஓட்டுநா்கள் இருவருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இவா்களில் முனியசாமி, ரோக்சியல் ஆகிய இரண்டு மீனவா்களின் கை ரேகைப் பதிவு சரியாக இல்லை என்பதால், இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், அவா்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். விசாரணைக்கு பின்னா், இரண்டு மீனவா்களுக்கும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து, அவா்களை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டாா்.