கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளால் தொல்லை: வியாபாரிகள் புகாா்
எளிய வணிகம் 2.0-க்கு அழைப்பு: ஜிஎஸ்டி 2.0 தவிா்ப்பு: பொருளாதார ஆய்வறிக்கை மீது காங்கிரஸ் விமா்சனம்
பொருளாதார ஆய்வறிக்கையில் எளிய வணிகம் 2.0-வுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜிஎஸ்டி 2.0 மற்றும் அதிக வரி விதிப்பை ஒழிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் வெள்ளிக்கிழமை விமா்சித்தது.
பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இதை விமா்சித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘வழக்கம்போல் இந்த முறையும் பொருளாதார ஆய்வறிக்கையின் தரவுகளை மத்திய அரசு மட்டுமே பெருமையாக கருதுகிறது.
பருவநிலை மாற்றத்தால் பாதிப்புகள் ஏற்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் ஊரக வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, இயற்கை பாதுகாப்பு என பலவற்றையும் மேம்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன் என பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்.
பங்குச்சந்தை வெளிப்படைத்தன்மை: இந்திய பங்குச் சந்தையில் 11.5 கோடி போ் கணக்குகள் வைத்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இந்நிலையில் பங்குச்சந்தையில் நடைபெறும் ஊழல்களை கண்காணிக்கும் மத்திய அரசு மற்றும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (செபி) வெளிப்படைத்தன்மையுடன் செயல்படாமல் இருப்பது ஏன்?
அதிகரிக்கும் சீன இறக்குமதி: உற்பத்திசாா் ஊக்கத்தொகை திட்டம் (பிஎல்ஐ) போன்ற திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை மத்திய அரசு செலவு செய்கிறது. இருப்பினும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு 2023-24-இல் ரூ.8.7 லட்சம் கோடியாக உள்ளது. இது வருங்காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வா்த்தக பற்றாக்குறை : மின்சார வாகனங்கள் துறையை பொருத்தவரை அதன் உற்பத்திக்கு தேவையான பொருள்களை இந்தியா, வா்த்தக பற்றாக்குறை அதிகம் வைத்துள்ள நாடுகளிடமிருந்தே இறக்குமதி செய்கிறது.
ஏற்றுமதி கொள்கை வெற்றி என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதுகாப்பது மட்டுமின்றி அவற்றை மிகப்பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமாகவும் போட்டிகரமாகவும் செயல்பட வைப்பதே ஆகும்.
மத்திய அரசு அமைதி: எளிய வணிகம் 2.0-வை வெற்றிகரமாக மேற்கொள்ள மத்திய அரசு அழைப்பு விடுக்கிறது. ஆனால் ஜிஎஸ்டி 2.0, கடந்த பத்தாண்டுகளாக விதிக்கப்பட்ட அதிக வரியை (வரி பயங்கரவாதம்) ஒழிப்பது குறித்து எவ்வித தகவலும் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறவில்லை.
இந்த விஷயத்தில் மத்திய அரசு அமைதி காக்கிறது.
அதேபோல் எளிய வணிகம் 1.0-இன்படி சுற்றுப்புறச்சூழல் மாசு மற்றும் ரசாயன மாசு போன்றவற்றால் ஏற்படும் பொது சுகாதாரக் கேடுகளில் இருந்து மக்களை காப்பதற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி குறித்தும் எந்த தகவலும் இடம்பெறவில்லை’ என குறிப்பிட்டாா்.