2025-26 மத்திய பட்ஜெட்: வளர்ச்சி, பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப...
ஏமாற்றி வென்றதா இந்திய அணி? பட்லர் அதிருப்தி!
இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை களமிறக்கியதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி புணே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்த நிலையில், துபேவுக்கு மாற்று வீரராக ராணா களமிறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துபேவுக்கு பதிலாக களமிறங்கிய ராணா
இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 181 ரன்கள் குவித்தது. அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் திணறிய நிலையில், ஹர்திக் பாண்டியா, துபே, ரிங்கு சிங் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இந்த போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று அதிரடியாக விளையாடிய துபே, 53 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் ஓவர்டன் வீசிய பந்து துபேவில் தலைக்கவசத்தில் பலமாக தாக்கியது.
இதில், துபேவுக்கு தலையில் லேசான வலி ஏற்பட்டதால் மாற்று வீரராக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டார்.
இது ஐசிசி விதிகளுக்கு மாறாக இருப்பதாக இணையத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. ராமந்தீப் சிங் அணியில் இருக்கும்போது துபேவைவிட அதிக வேகத்துடன் பந்து வீசக் கூடிய ராணா சேர்க்கப்பட்டது சர்ச்சையானது.
ஐசிசி விதிப்படி, ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால், அவரின் திறன் கொண்ட மாற்று வீரரை மட்டுமே களத்தில் இறக்க வேண்டும். பேட்டர் என்றால் பேட்டர், சுழற்பந்து வீச்சாளர் என்றால் சுழற்பந்து வீச்சாளர்.
இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ராணா, 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பட்லர் அதிருப்தி
போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களுடன் பட்லர் பேசியதாவது:
”இணையான மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை. ஒன்று துபே 25 மைல் வேகத்தில் பந்து வீசுபவராக இருக்க வேண்டும் அல்லது ராணா சிறப்பான பேட்டராக இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் இணையான மாற்று வீரராக கருத முடியும்.
இதுகுறித்து என்னிடம் எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
நான் பேட்டிங் பிடிக்க வந்தபோது யாருக்கு பதிலாக ராணா என்ற குழப்பம் நீடித்தது. பிறகுதான் துபேவுக்கு பதிலாக களமிறக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர். நான் நடுவரிடம் முறையிட்டபோது, போட்டி நடுவர் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்துவிட்டனர். அதன்பிறகு பேசுவதற்கான வாய்ப்பில்லாமல் போனது.
இது ஆட்டத்தில் ஒரு பகுதி என்றாலும், போட்டி நடுவரிடம் முறையிட்டு முறையான விளக்கத்தை பெறுவோம்” எனத் தெரிவித்தார்.