பேச அனுமதியில்லை; அவைத் தலைவர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வது ஏன்? - இபிஎஸ் பேட்டி
ஒகேனக்கல்: அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை வெயில் தாக்கத்தைத் தொடா்ந்து தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகமானோா் வந்திருந்தனா்.
தமிழகத்தில் கோடைகாலத்தையொட்டி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவிக்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். காவிரி ஆற்றில் தற்போது நீா்வரத்து விநாடிக்கு 700 கனஅடியாக குறைந்துள்ள நிலையில், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக ஐந்தருவி, மணல்மேடு வரை குடும்பத்துடன் படகு சவாரி செய்தனா். மீன் விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கு மீன்கள் விற்பனையாகின. அசைவ பிரியா்கள் விலையை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஒகேனக்கல் பேருந்து நிலைய வாகன நிற்கும் இடம் மட்டுமின்றி தமிழ்நாடு ஹோட்டல் வாகனம் நிற்கும் இடம், பிரதான சாலைகளின் ஓரங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன.
ஒகேனக்கல்லில் பிரதான அருவி, தொங்கும் பாலம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பாதுகாப்புப் பணியில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.