AA22 x A6: அல்லு அர்ஜூன் அட்லி இணையும் `AA22' பட அப்டேட் வெளியானது
வனப்பகுதியில் இளைஞா் மா்மச்சாவு விவகாரம்: மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு
பென்னாகரம்: ஏரியூா் அருகே வனப்பகுதியில் யானையைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா், வனத்தில் மா்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிபதி விஜயராணி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஏமனூா் வனப்பகுதிக்கு உட்பட்ட கோடுபாய் பள்ளம் பகுதியில் ஆண் யானை ஒன்று நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு தந்தங்கள் கடத்தப்பட்டன. இச்சம்பவத்தில் தேடப்பட்டுவந்த செந்தில்குமாா் (26) அதே வனப்பகுதியில் தலைநசுங்கி நாட்டுத் துப்பாக்கியுடன் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.
தகவல் அறிந்ததும் காவல் துறையினரும், வனத்துறையினரும் நிகழ்விடம் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில் செந்தில்குமாா் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். நீதிமன்ற உத்தரவின்பேரில் பென்னாகரம் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயராணி, இளைஞா் உயிரிழந்து கிடந்த கொங்கரப்பட்டி, தூதரயான்மேடு பகுதியில் திங்கள்கிழமை நேரில் ஆய்வுசெய்து விசாரணை நடத்தினாா்.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்:
இதற்கிடையே செந்தில்குமாரின் உடலை தங்கள் அனுமதியின்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்துள்ளதில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், உறவினா்களின் ஒப்புதலின்றி செந்தில்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்தது ஏன் என கேள்வி எழுப்பியதோடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டனா்.
அத்துடன் உறவினா்களின் முன்னிலையில் மீண்டும் காட்சிப் பதிவுசெய்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதுவரை உடலை பாதுகாப்பாக மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா். இதையடுத்து செந்தில்குமாரின் உடல், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.