மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
ஒன் பை டூ
நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க.
“உண்மையில் ராகுல் காந்தி பேசுவதுதான் அநாகரிகமானது. ராகுல் காந்திக்குச் சட்டமும் தெரியவில்லை; இந்த நாட்டின் விதிமுறைகளும் தெரியவில்லை. நள்ளிரவில் நியமனம் எதுவும் செய்யக் கூடாது என்று சட்டம் ஏதும் இருக்கிறதா என்ன... புதிய தேர்தல் ஆணையரை நியமிக்கும் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துகொண்டிருக்கிறார். அங்கு முறைப்படிப் பேசித்தான் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையிலேயே அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால், புதிய ஆணையரை நியமிக்கக் கூடாது என்று தடை உத்தரவும் கிடையாது. ஒருவர் ஓய்வுபெறும் நிலையில், அந்தப் பதவிக்கு மற்றொருவரை நியமிக்கவேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது... தோல்வியடைந்த ராகுல் காந்தி, தன்னைப் பிரதமர்போல எண்ணிக்கொண்டு, அவர் சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம். நாடாளுமன்றத்தில் முறைப்படி ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டே தேர்தல் ஆணையர் நியமனம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது!”

இனியன் ராபர்ட், செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்.
“உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். முந்தைய தேர்தல் அதிகாரியையே பா.ஜ.க அவசரகதியில் நியமித்ததை நாம் எல்லோரும் நன்கறிவோம். ‘தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும்’ என்றது நீதிமன்றம். ஆனால் அதை மீறி, குறுக்குவழியில் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்தைக் கொண்டுவந்தது பா.ஜ.க. ஆணையர் தேர்வுக் கூட்டத்தின்போதும் ‘நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு ஆணையரை நியமித்துக்கொள்ளலாம்’ என்று ராகுல் காந்தி தெளிவாகச் சொல்லியிருந்தார். ஆனாலும், பா.ஜ.க அரசு, ஆணையரை இரவோடு இரவாகவே நியமித்துவிட்டது. இது, நாட்டின் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல். ஏற்கெனவே அரசு இயந்திரங்கள் அத்தனையையும் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் கிளை அணிகளாக மாற்றிவிட்டனர். அந்த வகையில், தேர்தல் ஆணையமும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சந்தேகம் இருக்கிறது. இந்த நிலையில், இப்போதும் அவசரகதியில் தேர்தல் ஆணையரை நியமித்திருப்பது, நமது சந்தேகத்தை உறுதிசெய்திருக்கிறது!”