கரந்தை கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு திருவிழா!
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கரந்தை கருணாசாமி திருக்கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் கரந்தையில் அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி திருக்கோயில் என்கிற அருள்மிகு வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது.
தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோயிலில் திருப்பணிகள் செய்து உள்ளார். கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து ஸ்ரீ வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் ஏழூர் பல்லாக்கு திருவிழா கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு இன்று ஏழூர் பல்லாக்கு நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட பெரிய கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ பெரியநாயகி உடனாகிய கருணாசுவாமி என்கிற ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் எழுந்தருளினர். அதைப்போல் சிறிய வெட்டிவேர் பல்லக்கில் மணக்கோலத்தில் அருந்ததி தேவி உடனுறை ஸ்ரீ வசிஷ்டர் எழுந்தருளினர்.
இதனையடுத்து சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சிவகணங்கள், மங்கல வாத்தியங்கள் இசைக்க திட்டை, கூடலூர், புன்னைநல்லூர் உள்ளிட்ட ஏழூர் தலங்களுக்கு சுவாமி புறப்பட்டு சென்றார்.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.