கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்: செந்தில் பாலாஜி
கோவை: கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை அனைத்து மாவட்ட கழகங்களின் சார்பிலும் பொதுக் கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், குறிப்பாக கோவை மாவட்டத்தில் இருக்கக் கூடிய 10 பேரவைத் தொகுதிகளில் உள்ள 3,017 வாக்கு சாவடிகளிலும் மிக எழுச்சியோடு ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் தொடங்கி இருக்கிறது.
குறிப்பாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வருகிற துரோகங்களை மக்கள் இடத்தில் எடுத்துச் சொல்லி நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் மக்களுக்கு வழங்கி இருக்கக் கூடிய சாதனை திட்டங்களை துண்டு பிரசுரங்களாக மக்கள் இடத்தில் கொடுத்து வீடுதோறும் சென்று மக்களை சந்தித்து கூறி வருகிறோம். அதில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முயற்சியில் அவர்களை இணைய வைப்பதற்கான முயற்சிகளை சிறப்பாக செய்து வருகிறோம். அதோடு உறுப்பினர் சேர்க்கையும் மிக எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில் இருக்கக் கூடிய வாக்காளர்களில் 30 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோரை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறோம். நிச்சயமாக இந்த பயணம் வெற்றிப் பயணமாக அமையும் என்று கூறினார்.
மேலும், கோவை மண்டலத்தில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, மாவட்டத்தில் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறியிருக்கிறோம். அதேபோல மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தெரிய வரும். 2026 இல் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பயணம் என்பது, தமிழ்நாட்டில் தளபதி ஸ்டாலின் என்பதை உறுதி செய்து, வாக்களிக்க வாக்காளர்கள் எழுச்சியோடு காத்திருக்கிறார்கள்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமில் மக்கள் எவ்வளவு தன்னெழுச்சியோடு இருக்கிறார்கள் என்பதை அனைவரும் பார்க்க முடியும். இதுதான் தமிழ்நாடின் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு நிலை. முதல்வர் ஸ்டாலினுக்குதான் முழு ஆதரவு என்றார்.
பிரபல யூடியூப் சேனல் கருத்து கணிப்பில் அதிமுகவுக்கு அதிகளவில் ஆதரவு இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, சாணக்கியார் சேனல். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர்? என்று கேள்வி எழுப்பியவர், நான் 2006 இல் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன், ஒருமுறை கூட நான் வெற்றி பெறுவேன் என யாரும் கூறியதில்லை. முடியாத பட்சத்திற்கு கடைசியில் இழுபறி என சொல்வார்கள். அது அவர்களின் மன நிலையைபொறுத்தது. அவர்கள் எந்த கட்சியை சார்ந்து இருக்கிறார்களோ அதற்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகளை சொல்வார்கள்.
முதல்வர் அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னையில் சாலையில் நடந்து சென்றபோது மக்கள் எவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள் என்பதை அனைவரும் பார்த்தோம். மக்கள் ஒட்டு மொத்த ஆதரவையும் முதல்வருக்கு வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என செந்தில் பாலாஜி கூறினார்.