பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இபிஎஸ் அஞ்சலி!
அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.கருப்பசாமி பாண்டியனின் உடலுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த திருத்து பகுதியில் உடல்நலக் குறைவு காரணமாக கருப்பசாமி பாண்டியன் புதன்கிழமை காலை காலமானார்.
இந்த நிலையில், தில்லியில் இருந்து திரும்பிய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, கருப்பசாமி பாண்டியனின் உடலுக்கு இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி கடம்பூர் செ. ராஜு, அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா, திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என். கணேசராஜா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிக்க : அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்
பின்னர் செய்தியாளர்களுடன் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:
“போற்றுதலுக்கு மிகுந்த மரியாதைக்குரிய கருப்பசாமி பாண்டியன் தென் மாவட்டங்களில் முத்திரை பதித்தவர். எம்ஜிஆர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். கட்சியை உயிராக நேசித்தவர். எம்ஜிஆர் காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். மாவட்டச் செயலராக இருந்தவர்.
ஜெயலலிதா காலத்தில் துணைப் பொதுச்செயலராக திறம்பட பணியாற்றியவர். தென் மாவட்ட மக்களும் அதிமுகவினரும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அதிமுகவின் தூணாக விளங்கியவர். நான் முதல்வராக பொறுப்பேற்றபோது என்னை நேரில் சந்தித்து, எங்களுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் உங்களுக்கு துணையாக நிற்பேன் எனக் கூறி எனக்கு வலிமை சேர்த்தவர். அவருடைய நினைவெல்லாம் கட்சிதான். அவருடைய இழப்பு அதிமுகவிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும், தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்றார்.
முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.