அம்பாசமுத்திரம் அருகே 10 நாளாக வனத்துறைக்கு போக்கு காட்டிய கரடி பிடிபட்டது!
அம்பாசமுத்திரம் அருகே கடந்த 10 நாள்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த கரடி கூண்டில் சிக்கியது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொன்மா நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரடி நடமாட்டம் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோயில்கள், குடியிருப்புகளில் சுற்றித் திரிந்த கரடியை பிடிக்க கடந்த 20ஆம் தேதி கூண்டு வைக்கப்பட்டது.
கரடியைப் பிடிப்பதற்கு கூண்டில் பலாப்பழம், வாழைப்பழம், அன்னாச்சி பழம், நெய், தேன், உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டன. கடந்த 10 நாள்களாக கூண்டில் சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி கரடியானது அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. இதனால் கரடியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் .
இந்த நிலையில் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரடியானது அதற்காக வைக்கப்பட்ட கூண்டில் வசமாக சிக்கியது.
செவிலியர்கள் அலட்சிம்! பிறந்த குழந்தை பலி!
தகவல்அறிந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா சம்பவ இடத்திற்கு சென்று கூண்டில் சிக்கிய கரடியை ஆய்வு மேற்கொண்டார் .
தொடர்ந்து, ஆக்ரோஷமாக இருந்த கரடிக்கு பத்துக்கும் மேற்பட்ட வனத்துறை குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர்.
கரடி முழுமையாக மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் காரையாறு அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கரடி ஏற்றிச் சென்ற வாகனத்தின் முன்பு கோயில் பூசாரி, சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொண்டு வழி அனுப்பி வைத்தார்.