இன்றுமுதல் வருமான வரி மாற்றங்கள் அமல்: தெரிந்துகொள்ள வேண்டியவை!
2025-2026 நிதியாண்டின் முதல்நாளான இன்று(ஏப்ரல் 1) முதல், புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் வருமான வரிச் சட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பல மாற்றங்கள் அமலாகின்றன.
முக்கியமாக, ரூ. 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் தனிநபர்கள், இனி வருமான வரி செலுத்த தேவையில்லை. முன்னர், மேற்கண்ட வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டிலிருந்து வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளாதல் நடுத்தர வர்க்கத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அத்துடன் வரிக் கழிவாக ரூ. 75,000 வருமானம் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தமாக ரூ. 12,75,000 வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை.
ஆனால், இதற்காக தனிநபர்கள் புதிய வருமான வரி விதிப்பு நடைமுறைக்கு மாற வேண்டும். பிரத்யேகமாக ஐடிஆர் படிவத்தை நிரப்பி வருமான வரி சட்டப்பிரிவு 87ஏ-இன் கீழ் வரி விலக்கு பெற விண்ணப்பிக்க வேண்டும்.
ரூ. 24 லட்சம் அல்லது அதற்கும் மேல் வருமானம் பெறுவோர் வருமான வரிவிதிப்பில் உச்சபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, வருமானத்தில் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
மேலும், ரூ.12 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் தனிநபா்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், வருமான வரி படிநிலைகள் மற்றும் விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ. 4 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. தற்போது இந்த வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது.
மேற்கண்ட அறிவிப்புகளை 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.