75 வயதில் 35 வயது பெண்ணுடன் திருமணம்; மறுநாள் நடந்த அதிர்ச்சி
கரூர் மரணங்கள்: ``பேராசையும், அதிகார தாகமும்தான் காரணம்'' - என்ன சொல்கிறார் சந்தோஷ் நாராயணன்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அதிகாரத்தாகம் தான் இந்த நிலைக்குக் காரணம் என்றும் அரசியலில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
அவரது பதிவில், "கரூரில் நெரிசலில் ஏற்பட்ட அப்பாவிகளின் உயிரிழப்பை நான் ஆழமாக தனிப்பட்ட இழப்பாகவே உணர்கிறேன். என்னை முற்றிலும் சிதைத்துவிட்டது.
இந்த மன்னிக்க முடியாத துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் உறவினர்களும் மன அமைதியை அடைய வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன். இந்த பயங்கரச் சம்பவத்தால் ஏற்பட்ட வேதனை, கோபம், உதவியற்ற நிலை ஆகியவற்றிலிருந்து என்னை மீட்டெடுக்க சில நாட்கள் எடுத்துக்கொண்டதற்கு மன்னிக்கவும்.

என்னுடைய நேர்மையான தனிப்பட்ட கருத்தில், அடங்காத பேராசை, அதிகாரத்துக்கும், புகழுக்குமான முடிவில்லாத பசி, மக்களின் மனப்பாங்கை எளிதாக மாற்றும் திறன், அதனுடன் இன்னும் அதிக அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் கொண்ட பேய்த்தனமான தாகம் இவை அனைத்துமே நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளன.
நாம் அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு சூழலை (ecosystem) உருவாக்காவிட்டால், இவையெல்லாம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
இன்றைய டிஜிட்டல் உலகில் இது சாத்தியம். நாம் அந்த நிலையை அடையும் வரை, நமக்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருந்து கொண்டிருக்கலாம்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவியான, அழகான ஆன்மாக்கள் சாந்தியடையட்டும். நீங்கள் அனைவரும் உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள் — லவ் யூ ஆல், உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்கும் அமைதிக்கும் இறைவனை வேண்டுகிறேன்." எனக் கூறியுள்ளார்.