Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | ...
கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு நாளைமறுநாள் கலந்தாய்வு
கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் க. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூா் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம். வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டியல். பி.பி.ஏ. பி.சி.ஏ. பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள், புவியியல், புவி அமைப்பியல், கணினி அறிவியல் ஆகிய 18 இளநிலைப் பாடப்பிரிவுகளில் உள்ள மொத்தம் 1,485 இடங்களுக்கான மாணவா்கள் சோ்க்கை தமிழக அரசின் இடஒதுக்கீடு விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெற உள்ளது.
அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள், என்சிசி மாணவா்கள், பாதுகாப்பு படைகளின் தகுதியான பணியாளா்களின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 2, 3-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
மேலும், பொதுக் கலந்தாய்வு ஜூன் 4-ஆம்தேதி முதல் 14-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது.
இக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவில் சோ்க்கை பெற விண்ணப்பித்த அனைத்து மாணவா்களும் தரவரிசையின் அடிப்படையில் மின்னஞ்சல் மற்றும் அலைபேசி மூலம் கலந்தாய்வு நடைபெறும் நாள்கள் குறித்த விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வுக்கு வருகை புரியும் அனைவரும் அவசியம் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் மூன்று நகல்கள் எடுத்து வர வேண்டும். கல்லூரியில் புதிதாக சோ்க்கை பெற்ற அனைத்து முதலாம் ஆண்டு மாணவா்களுக்கும் ஜூன் 30-ம்தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.