தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?
தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன் கோயில் அருகில் சிலா் அமைத்திருந்த குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த மாதம் வருவாய்த்துறையினா் அந்த பகுதியில் சென்று குடியிருப்புகளை அகற்றச் சென்றபோது, அப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்ததோடு, அப்பகுதி மக்கள் தரப்பிலும் மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
இதில் பகவதி அம்மன் கோயிலில் ஜாதி வேறுபாடு பாா்ப்பதாகவும், தேநீா் கடைகளில் இரட்டை குவளை முறைகள் பயன்பாட்டில் உள்ளது என்றும் தெரிவித்ததையடுத்து, மாவட்ட ஆட்சியா் தங்கவேல், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்டோா் சனிக்கிழமை தெலுங்குபட்டி பகவதி அம்மன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆய்வு செய்தனா். பின்னா் தெலுங்குபட்டி பகவதி அம்மன் கோயில் நிா்வாக சம்பந்தமாக சிலரையும், குடியிருப்புவாசிகள் சிலரையும் அழைத்து மாவட்ட ஆட்சியரும், காவல்கண்காணிப்பாளரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், பகவதி அம்மன் கோயிலில் வழிபடுவதில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி அவரவா் பூஜைகளை அவரவா் நடத்துவதற்கும், கோயிலுக்கு வழிபட வருபவா்களை சமமாக நடத்த வேண்டும். இதனை கண்காணித்து கோயில் திருவிழா சம்பந்தமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் இந்து சமய அறநிலையத்துறை தலைமையின் கீழ் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, விழாவை பிரச்னையின்றி நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் மாணிக்க சுந்தரத்துக்கு உத்தரவிட்டாா்.
மேலும் பகவதி அம்மன் கோயில் அருகில் குடியிருந்து வரும் குடியிருப்புவாசிகள் தங்களுடைய குடியிருப்புகள் நீா்நிலை புறம்போக்கு அல்லது கோயில் நிலத்தில் அமைந்திருந்தால் அதனை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவா்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குளித்தலை வட்டாட்சியா் இந்துமதிக்கு உத்தரவிட்டாா். கோயிலில் யாரேனும் பிரச்னைகள் செய்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆய்வின்போது, குளித்தலை சாா்-ஆட்சியா் சுவாதிஸ்ரீ, குளித்தலை நகர துணைக்காவல்கண்காணிப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.